Tuesday, January 4, 2011

ஞானானந்தர் திருப்பள்ளியெழுச்சி

ஞானானந்தர் திருப்பள்ளியெழுச்சி

குரு மொழி கொண்டு நன்னெறி நின்ற பக்தர் தம்
உத்தம உலாக் கமலங்கள் மலரவும்
இருள் வழி சென்றுளம் அலமந்து நிற்குமிவ்
விரு நில மாந்தரின் மருளெல்லாம் மாறவும்
பொருளீட்டும் வெறி நீங்கி பூதலத்தோரெல்லாம்
பூரண இன்பம் பெரும்வழி எய்தவும்
அருள் தேடும் அன்பரைக் காக்கும் ஞானனந்தப்
பரம் பொருளே பள்ளி யெழுந்தருளாயே!

அன்னையின் மிக்க நின் அன்பினைக் காணவும்
மின்னும் நின் பொன்முகம் கண்டு களிக்கவும்
பின்னும் நின் தாமரைத் தாள்களில் வீழ்ந்து நின்
புன்முறுவல் தனைக் கண்டுளம் பொங்கவும்
இன்னல்கள் நீக்கும் நின் தண் ண ளிப் பார்வையும்
இன்சொல்லும் பெற்றவர் தன்னை மறக்கவும்
முன்னைத் தவம் செய்தோர் வந்து நின்றார் ஞான
மன்னவனே பள்ளி யெழுந்தருளாயே!

பூமாலை கொண்டு நற் புண்ணியர் வந்துனை
வாழ்த்தி வணங்கிடக் காத்து நிற்கின்றார்
பாமாலை கொண்டுனைப் போற்றும் பக்தரெலாம்
பாடிப் பரவசமாகி நின்றார் உந்தன்
நாமாவை நாவார நாளும் பாடும் இவர்
நோக்கம் உந்தன் கடைக் கண்ணோக்கம் இந்நோக்கம்
ஆமாறருள் செய்ய அமல ஞானனந்த க்
கோமானே பள்ளி யெழுந்தருளாயே!

வடமொழி வேதத்தின் வாழ்த்தொலி கேட்கவும்
குடமுனி கீதங்கள் மடந்தையர் பாடவும்
உடனிருந் துறு பணி உவகையோடியற்றிட
உம்பரும் வந்து நும் மருங்கினில் நின்றார்
மிடியினை நீக்கி பவப் பிணி போக்கிடும்
தெய்வத் தென்னாங்கூர் அமர்ந்த ஞானனந்த
வடிவினில் அடியரை வாழ வைக்க வந்த
வள்ளலே பள்ளி யெழுந்தருளாயே!

முற்றும் துறந்த முனிவரும் கைதொழ
கற்றவர் கண்டு வியந்து மகிழ்ந்திட
குற்றேவல் செய்ய குவலயத் தொரன்றி
மற்றுலகத் தோறும் வந்து நின்றார்
குற்றம் செய்தோர் உந்தன் பொற்கழலுற்றவர்
குற்றம் நீங்கி நலம் பெற்றவர் உய்ந்திட
நற்றவத் தோரெல்லாம் நாடும் ஞானனந்தக்
கொற்றவனே பள்ளி யெழுந்தருளாயே!

No comments:

Post a Comment