Wednesday, January 28, 2015

சிவசைலம் - 12

பன்னிரண்டாவது அத்யாயம்
ஸூதர் சொல்கிறார்:- இப்பொழுது பாபநாச லிங்கத்தின் ஆவிர்பாவத்தைச் சொல்கிறேன். முன் ஒரு ஸமயம் மஹாதேவர் பார்வதியை கல்யாணம் செய்து கொள்ளத் தீர்மானத்தார். மூவுலக ஜனங்களுக்கும் கூடிய ஹிமாலயத்தில் பார்வதி கல்யாண மஹோத்ஸவம் மிகச்சிறப்பாக நடந்தது. கல்யாணத்தை தரிசிப்பதற்காக பாரதவர்ஷத்திலுள்ள ஸ்தாவரஜங்கமப்ராணிகள் யாவரும்  அங்கு கூடிவிட்டார்கள். ப்ராணிகளின் பாரத்தால் பூமியின் வடபாகம் கீழே இறங்கி தென்பாகம் மேலே எழும்பிவிட்டது. இதைப்பார்த்து மஹாதேவர் எந்த உபாயத்தால் தென்பாகம் கீழே தாழ்ந்து பூமி ஸமமாகும்என்று ஆலோசித்து அகஸ்த்யரைப் “பூமி ஸமநிலையடைவதர்காக நீர் தென் திசை செல்ல வேண்டும் எதிர் வார்தை ஒன்றும் பேசாமல் சீக்கிரம் செல்ல வேண்டும். பூமியை ஸமமாக ஆக்குகிறவர் உன்னைத் தவிர வேறு ஒருவருமில்லை.” என்று சொன்னார்.

இவ்வாறு ஈச்வரன் சொன்னதும் கல்யாண உத்ஸவத்தை பார்க்க முடியாமல் போய்விடுமே என்ற வருத்தமுள்ள போதிலும் சிவனுடைய உத்தரவை சிரஸால் ஏற்றுக் கொண்டு ஆலோசித்தார். சிவனுடைய உத்தரவையும் நிறைவேற்ற வேண்டும். கல்யாண உத்ஸவத்தையும் தர்சிக்க வேண்டும் இந்த இரண்டும் நிறைவேற என்ன உபாயம் என்று ஆலோசித்து ஒன்றும் தோன்றாமல் மனம் ஊசலாடியது.

இவ்வாறு அகஸ்த்யர் கவலையுற்றிருக்கும் போது மஹாதேவர் ‘மஹர்ஷே ! கவலையைவிடும். சைத்ரமாதத்தின் ஆரம்பத்தில் விஷுவன்று உமக்கு கல்யாண வைபவத்தைக் காட்டுகிறேன். சீக்கிரம் கிளம்ப வேண்டும் விந்த்ய மலையின் கர்வத்தையடக்கிவிட்டுச் செல்லும் தென்கடலின் கரையில் த்ரிகூடம் என்ற மலை உள்ளது. அதன் சமீபத்தில் கீழ்பக்கத்தில் கடநா நதியின் தென்கரையில் அனாதி சிவசைலேசர் என்று ப்ரஹ்மாவால் பூஜிக்கப்பட்டு வாஸம் செய்கிறேன். அங்கு சென்று என்னை பூஜை செய்யும். அங்கு வ்ருத்தரான அத்ரி முனிவரை தர்சனம் செய்து அவரிடம் அனிமதி பெற்றுக்கொண்டு மலய பர்வதம் சென்று அங்கு வெகு காலம் வாஸம் செய்யும். இந்த கங்கையும் என் உத்தரவால் உன் ஸ்மீபத்தில் தாம்ரபர்ணீ என்ற பெயருடன் தோன்றுவாள். மலயபர்வதத்தின் வடபக்கத்தில் தாம்ரபர்ணீ நதிக்கு மேற்கே உமது ஸந்தோஷத்திற்காக பாபநாசேச்வரர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக தோன்றி அங்கு எப்பொழுதும் ஸாந்நித்யம் கொண்டு வாஸம் செய்வேன். அங்கு தினமும் நதியில் ஸ்நாநம் செய்து விதிப்படி என்னை பூஜை செய்யும். அங்கு சித்திரை மாத ஆரம்பத்தில் விஷுவன்று என்னுடைய கல்யாண ஸ்ந்தர ரூபத்தைக் காட்டுகிறேன். உடனே புறப்பட்டுச் செல்லும் தாமதம் வேண்டாம்’ என்று சொன்னார்.

இதைக் கேட்டு அகஸ்த்யர் பரமசிவனின் உத்தரவை தலையால் ஏற்றுக் கங்கையை எடுத்துக்கொண்டு மலயபர்வதம் சென்றார். நடுவில் சிவசைலேசரை தர்சித்து பக்தியுடன் பூஜித்து அத்ரி முனிவரைக் கண்டு வணங்கி அனுமதி பெற்று கடநா நதியில் ஸ்நாநம் செய்து மலயமலைக்கு சென்றார். அங்கு நுழைந்ததும் மேலே எழும்பியிருந்த தென்பாகம் தாழ்ந்து அகஸ்த்யரின் மஹிமையால் பூமி ஸமநிலையையடைந்தத்து. அப்பொழுது அம்மலையில் கங்கையும் தாம்ரபர்ணீ என்ற பெயருடன் ஆவிரபவித்தாள். பரமசிவன் அகஸ்த்யருக்கு ப்ரீதியை உண்டு பண்ணுவதர்காக பாபநாசேசர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக ஆவிர்பவித்தார். அகஸ்த்யர் தாம்ரபர்ணீ நதியில் ஸ்நாநம் செய்து பாபநாசேச்வரரை பலவித ஸ்தோத்ரங்களால் துதித்து ஆனந்தமடைந்தார். வருஷாரம்பத்தில் சைத்ரமாஸத்தின் ஆதியில் சித்திரை விஷுவன்று பார்வதியுடன் கூட கல்யாணவேஷத்தில் ப்ரம்ஹாதிதேவர்களால் துதிக்கப்படும் சிவனை தர்சித்து நிறைந்த மனதுடன் பிறவிப்பயனைப்பெற்று க்ருதார்தரானார்.

ஹே விப்ரச்ரேஷ்டர்களே !பாபநாசேச்வரர் தோன்றிய வரலாறு உங்களுக்குச் சொல்லப்பட்டது. பாபநாசேச்வரரின் மாஹாத்ம்யம் முழுவதையும் யாரால் வர்ணிக்கமுடியும்? மூன்று லிங்கங்களின் உத்பத்தி என்னால் கூறப்பட்டது மூன்று லிங்கங்களுள் சிவசைலேசலிங்கம் சிறந்த்தது. எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருப்பதாலும் ப்ரம்ஹாதிகளால் பூஜிக்கப்பட்டதாலும் மேற்கு முகமாக இருப்பதாலும் ஸ்ரீசிவசைலேசர் மேலானவராகக் கருதப்பட்டுள்ளார்.

இந்த சிவசைல ஸ்தலத்திற்கு ஸமமாக மற்றொறு ஸ்தலம் இருப்பதாக எவன் சொல்கிறானோ அவன் பாபத்தை சித்ரகுப்தனும் எண்ணமுடியாது. எவன் சிவசைல ஸ்தலத்தில் நித்யமாக வாஸம் செய்கிறானோ அவனுடைய புண்யங்களை எண்ணுவதற்கு சித்ரகுப்தனுக்கும் சக்தியில்லை. மூவுலகிலும் சிவசைலத்துக்கு ஸமமான க்ஷேத்ரமில்லை. சிவசைலேசலிங்கத்திற்கு எவன் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்கிறானோ அவன் பிள்ளை பேரன்களுடன் வெகுகாலம் ஸுகமாக வாழ்வான். சிவசைல க்ஷேத்ரத்திற்கு எவன் ஜீர்ணோத்தாரம் செய்கிறானோ அந்த புண்யசாலிக்கு எல்லா ஸித்திகளும் கையில் கிடைத்தமாதிரி தான்.    

இந்த சிவசைலமாஹாத்ம்யத்தில் ஒரு ச்லோகமோ அரை ச்லோகமோ எவன் ச்ரவணம் செய்கிறானோ  அவன் இவ்வுலகில் பலவித போகங்களை அனுபவித்து சிவசைலபதியை அடைவான். 12 அத்யாயம் கொண்ட சிவசைலமாஹாத்ம்யத்தை எவன் ப்ராம்ஹணர்களுடன் சொல்கிறானோ அவன் கல்யாணீசரின் அருளால் எல்லா அபீஷ்டங்களையும் அடைவான். எவன் 12 அத்யாயங்களை எழுதி பூஜிக்கிறானோ அவனுக்கு கல்யாணீசரின் அனுக்ரஹத்தால் ஸந்தான வ்ருத்தி ஏற்படும். எவன் 12 அத்யாயங்களையும் ச்ரவணம் செய்கிறானோ அவன் சிவசைசேசர்தான். இதைப் பற்றி விசாரிக்கவே வேண்டாம். சிவசைலேச லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை நடக்கும்படி எவன் ஏற்பாடு செய்கின்றானோ அவனுடைய இஷ்டங்களெல்லாம் நிறைவேறும். ஸந்தேஹமில்லை. இந்த 12 அத்யாயங்களை அமாவாஸை பௌர்ணமீ ஆகிய பர்வகாலங்களில் எவன் படிக்கிறானோ மூவுலகமும் அவனுக்கு வசமாகிவிடும் ஸம்சயமில்லை.

எவன் சிவனிடம் பக்தியுடன் இந்த சிவசைலபதியின் கதையை கேட்கிறானோ சொல்கிறானோ அவன் சிவசைலேசரின் க்ருபைக்கு பாத்ரமாவான். சிவனைப் போலவே இவனுடைய சரணங்களையும் எல்லோரும் வணங்குவார்கள். சிவசைல புண்யஸ்தலம் சிவஸாயுஜ்ய பலனைத்தரும் பெருமையுள்ளது. ஆகையால் இதன் வைபவம் முழுவதையும் வர்ணிப்பதற்கு சிவன் ஒருவருக்கு தான் ஸாமர்த்யமுண்டு.

ஸ்னேகபுரியை (அன்பூர் = ஆம்பூர்) வணங்குகிறேன். கல்யானி அம்பிகையை வணங்குகிறேன். கடநா நதியை வணங்குகிறேன்.

     பன்னிரண்டாவது அத்யாயம் முற்றும்.

   சிவசைல மாஹாத்ம்யம் முற்றுப் பெற்றது. 

சிவசைலம் - 11

பதினோறாவது அத்யாயம்
ருஷிகள் கேட்கிறார்கள் : ‘ சிவசைலேசர், ராமேசுவரர் ( ராமநாதர் ) வஹ்நீச்வரர், பாபநாசேச்வரர் இந்த நான்கு லிங்கங்களுக்கும் மத்தியில் உள்ள பஞ்சக்ரோசம் என்று தங்களால் ,முன்னர் கூறப்பட்டது. இங்கு வாஸம் செய்பவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும். மேலும் சிவசைலேச லிங்கள் தோன்றிய விவரம் கூறப்பட்டது. மற்ற லிங்கங்களின் ஆவிர்பாவத்தையும் கூற வேண்டும்’.
ஸூதர் கூறுகிறார் : - முன்னால் தசரத குமாரரான ஸ்ரீராமர், இறந்த பிராமண குமாரனைப் பிழைக்கச் செய்வதற்காக தவம் செய்து கொண்டிருக்கிற ‘ சம்புகன் ‘ என்ற சூத்ரனைக் கொன்றார்.
தாபஸனான சூத்ரனைக்கொன்றதாலெற்பட்ட பாபத்தால் துன்பமடைந்த தார்மிகரான சிறிது நேரம் ஆலோசித்து கொன்ற பாபத்தைப் போக்கும் சிறந்த ஸாதனம் சிவபூஜை என்று எண்ணினார். இவ்வாறு தீர்மானித்து சீக்கிரம் சிவபூஜை செய்ய விருப்பம் கொண்டவராய் சிவாராதனம் செய்வதற்குத் தகுந்த ஸ்தலத்தை ஆலோசித்தார். பிறகு எங்கு தாபஸ சூத்ரனை கொன்றாரோ அந்த ஸ்தலத்திலேயெ ராகவன் தன் பெயரிலேயெ ( ராமேசுவரர் அல்லது ராமநாதர் )  ஒரு லிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்து முறைப்படி ஆலய நிர்மாணம் செய்து தேவதேவனை எல்லா உபசாரங்களாலும் பூஜித்து ஆனந்தமடைந்தார். தன் பெயரிலேயே புண்யதீர்த்தத்தையும் நிர்மாணித்து அதில் ஸ்நானம் செய்து சிவனை பூஜித்து பரிசுத்தியடைந்தவராக சிவனை வணங்கி மிகுந்த பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
“ பிரபோ! உலகங்களுக்கு நாதனான தங்களுக்கு நமஸ்காரம். தாங்கள் உலக உருக் கொண்டவர். விஷத்தை சாப்பிட்டதால் கருப்பான கழுத்தை உடையவர். துஷ்டர்களை அழச்செய்பவர், பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவர். பக்தர்கள் விரும்பும் பலன்களை வர்ஷிப்பவர். பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர். மேலானவர். பரமாத்மா பசுக்கள் போன்ற ஜீவர்களுக்கு பதி. பக்தர்களின் துன்பமாகிற இருட்டைப் போக்கும் ஸூரியன். பரம மங்கள ஸ்வரூபி. மங்களத்தைத் தருபவர். மஹாதேவா! உமக்கு நமஸ்காரம். கிருபையால் என்னை காப்பாற்ற வேண்டும். “
இவ்வாறு ராமர் மஹாதேவனை துதித்துவிட்டு பக்தி பரவசரானார். அப்பொழுது பக்தவத்ஸலரான மஹாதேவர் ராமரைபார்த்துக் கூறுகிறார்.
சிவன் ;- ‘ ஹே ராம! நான் ஸந்தோஷமடைந்தேன். சூத்ர தாபஸனைக் கொன்ற பாபத்திலிருந்து விடுபட்டு விட்டாய். நீ எப்போதும் சுத்த ஸ்வரூபன். மனிதரைப் போல் நடிக்கிறீர். நீரே உலகங்களுக்கு ஆத்மா. உம்மிடத்தில் எல்லாம் நிலை பெற்றிருக்கின்றன். ‘ இவ்வாறு கூறப்பட்ட ராமர் சம்புவைப் பார்த்துக் கூறினார்.
ராமர்:- என் பெயருடன் விளங்கும் இந்தப் புண்யதீர்த்ததில் புண்யகாலங்களில் எந்த மனிதன் ஸ்நானம் செய்து அதன் அங்கமான தீர்த்த ச்ரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளால் பித்ருக்கள், தேவதைகள், ரிஷிகள் இவர்களை த்ருப்தி செய்து என்னால் பூஜிக்கப்பட்ட உம்மை தர்சனம் செய்கிறானோ, அவனுடைய அபீஷ்டங்களெல்லாம் உமதுஅருளால் நிறைவேற வேணும். எல்லாப் பாபங்களுடன் கூடினவனாயிருந்தாலும் இந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து என் நாதனான தங்களை தர்சனம் செய்கிறானோ அவன் சுத்தனாகட்டும். இந்த ராமேசுவர ஸ்தலத்தைச் சுற்றி ஒரு யோஜனை தூரத்தில் உள்ள பிரதேசம் உமது அனுக்ரஹத்தால் குருக்ஷேத்ரத்தைக் காட்டிலும் அதிகமான பலனைக் கொடுக்கட்டு. “
இவ்வாறு தேவேசனைப் ப்ரார்த்தித்து அவரிடம் விடைபெற்றுக் கொண்டு ஸந்தோஷத்துடன் புறப்படும் சமயத்தில் மறுபடியும் சிவசைலேசரை தரிசித்து நமஸ்கரித்து துதித்துத் தன் இருப்பிடம் சென்றார்.
முனிவர்களே! இவ்வாறு ராமநாத லிங்கம் தோன்றிய விவரம் உங்களுக்கு கூறப்பட்டது . வஹ்னீச்வரரின் உத்பத்தியைக் கூறுகிறேன். முன் ஒரு சமயம் அக்னி பகவான் ஸப்த்ரிஷிகளின்ம் மனைவிகளிடம் ஆசை கொண்டான். இது தெரிந்த முனிவர்கள் தம் தபோபலத்தால் ஒளியற்றுப் போகும்படி அக்னியை சபித்தார்கள். உடன்  அக்னி தேவன் சிவசைலம் சென்று சாபம் நீங்குவதற்காக தவம் செய்தான். பிறகு சிவசைலத்திற்கு முன்னால் தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை நிர்மாணம் செய்து தீர்த்தத்திற்கு மேற்கில் வரநதிக்குக் கிழக்கில் வஹ்நிநாதேசர் என்ற லிங்கத்தை ஸ்தாபித்தார். பிரதி தினமும் முக்காலங்களில் ஸ்நானம் செய்து பக்தியுடன் சிவனைப் பூஜித்து இதனால் ரிஷிகளின் சாபத்திலிருந்து விடுபட்டு அக்னி தேவன் முன்போல் ஒளியுடன் விளங்கினார். அதனால் வஹ்நிநாதர் விளங்கும் ஸ்தலம் பரிசுத்தமானது. ஒப்பற்றது. வஹ்னீச்வர லிங்கத்தைச் சுற்றிலும் ஒரு யோஜனை தூரம் பரிசுத்தமானது. மஹாபாபங்களையும் போக்கவல்லது. பிராமணர்களே! வஹ்னிநாத லிங்கத்தின் ஆவிர்பாவம் கூறப்பட்டது. பாபநச லிங்கத்தின் உத்பத்தியை கூறுகிறேன் கேளுங்கள்.
   பதினோறாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 10

 பத்தாவது அத்யாயம்.
சிவன் கூறுகின்றார் :-- மணலூருதேசாதிபதியான பாண்ட்யராஜனே பக்தருக்கு அபீஷ்டத்தைக் கொடுக்கும் நான் உனது பக்தியால் மிகவும் ஸந்தோஷமடைந்தேன். என் பக்தர்களில் உனக்கு ஸமமானவர் ஒருவருமில்லை ஆகையால் உன் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன். உனக்கு வரம் கொடுப்பதற்காக நான் வந்திருக்கிறேன். வேண்டிய வரங்களைக் கேள் உன்னை ப்ரீக்ஷிப்பதற்காக என் உத்தரவின் பேரில் குஹன் முனிகுமார வேஷங்கொண்டு உன்னுடன் சண்டையிட்டு உன்னைத் தோல்வியுறச்செய்தான். அதை மன்னித்து விடு.
சண்டையிட்ட வீரர்கள் முக்ய மந்த்ரிகள் உன் தம்பி ஸத்யகீர்த்தி யானை, குதிரை, தேர், காலாட்படைகள் எல்லோரும் என் அருளால் பிழைத்துப் பழைய பலத்துடனும் அலங்காரத்துடனும் விளங்குவதைப்பார் எல்லோருடனும் நீ தேரில் ஏறிக்கொண்டு ஸந்தோஷத்துடன் குதிரையைப் பிடித்துக் கொண்டு உன் நகரம் சென்று யாகத்தைப் பூர்த்தி செய். யாகமுடிவில் என் அருளால் குஹன் உனக்குப் புத்ரனாக வருவான். எல்லோரையும் ஜயிப்பதற்காக சத்ருக்களையழிக்கக்கூடிய சூலாயுதத்தையும், பாசுபதாஸ்த்ரத்தையும் தருகிறேன். பெற்றுக்கொள். அனேக யாகங்களைச் செய்து பூவுலகில் மற்றவர்களுக்குக் கிடைக்காத போகங்களை அனுபவித்துக்கொண்டு அரஸாக்ஷி செய்து பிள்ளை பேரன்களுடன் பூவுலகில் வெகுகாலம் வாழ்ந்து முடிவில் தேஹத்தை விட்டு என் ஸாயுஜ்யத்தை அடைவாய்.
இவ்வாறு ஈசனால் கூறப்பட்ட வார்த்தையைக் கேட்டு அரசன் மிகவும் ஸ்ந்தோஷமடைந்தவனாய் குரல் தழதழக்க ஈசனைப் பார்த்துக் கூறினான். என் மனதில் ஏற்படும் எண்ணங்களெல்லாம் உன் திருவடித் தாமரையைப் பற்றினதாகவே இருக்க வேணும். என் வாக்குகள் உன் நாமாக்களைச் சொல்ல வேணும். என் சரீரம் உன்னை வணங்குவதில் ஈடுபட வேண்டும். என்னிடம் தாங்கள் மிகவும் ஸ்னேகம் (அன்பு) காட்டியதால் இந்த நகரம் ஸ்னேகபுரீ என்ற பெயருடன் விளங்கட்டும். (sneh அன்பு purI ஊர். அன்பூர் இந்த பெயர் இப்பொழுது ஆம்பூர் என்று மாறிவிட்டது.) நானும் குஹனும் சண்டை செய்த இந்த பூமி குஹன் பெயரால் விளங்கட்டும் ”  என்று ப்ரார்த்தித்தான். ஈசனை திருப்பி திருப்பி வணங்கினான். பிறகு மயில்வாஹனத்தில் அமர்ந்திருக்கும் ஷண்முகரை வணங்கி ப்ரபோ ! என் குற்றத்தை மன்னித்துக்காப்பாற்ற வேண்டும் என்று கூறி வணங்கினான். ஸ்கந்தர் பரம்பக்தனான அரசனைப் பார்த்து ‘ எல்லாம் ஈசன் செயல் ’ என்பதை நினைவுறுத்திக் கொள் அரசனே! சம்புவால் எது சொல்லப்பட்டதோ அது அப்படியே நடைபெறும்.
இவ்வாறு சொல்லப்பட்ட அரசன் ஸ்கந்தரையும் சிவசைலபதியையும் வணங்கிவிட்டு குதிரையுடனும் ஸைன்யங்களுடனும் மந்திரிகளுடனும் தம்பியுடனும் தன் நகரம் வந்து ஈசனை மனதில் த்யானித்து யாகத்தை நடத்தி ஸந்தோஷமடைந்தான். குஹனும் ஈசன் வாக்கியத்தை ஸத்தியமாக்குவதற்காக அரசனுக்கு புத்திரனாக பிறந்து மனித ஸ்வபாவப்படி பாலலீலைகளைச் செய்தான். குஹனைப் புத்திரனாகப் பெற்ற ஸுதர்சன ராஜன் சாலிவாடீபுரத்திற்கு ( திருநெல்வேலிக்கு ) கிழக்கில் ஓர் நகரத்தை நிர்மாணம் செய்து குஹனை ராஜ்யத்தில் அமர்த்தி தான் ஸ்நேகபுரியில் வாஸம் செய்து கொண்டு மிகுந்த பக்தியுடன் சிவசைலேசரை பூஜித்தான். சிவாகமமறிந்த பிராமணனை வரவழைத்து தினமும் ஐந்து கால பூஜை நடத்தி வைத்தான். 18 வாத்யங்களாலும் ஆயிரக்கணக்கான தாஸீ தாஸர்களாலும் பலவித ரத்னங்கள் பதித்த ஆபரணங்களாலும் சிறந்த வஸ்திரங்களாலும் ஈசனுக்கு ப்ரீதி உண்டு பண்ணினான். தன் பெயரால் கடநா நதியில் அணைகட்டி வயல், தோட்டம், தோப்பு, நந்தவனங்களை நிர்மாணித்தான். சிவசைலத்தின் தினமும் உத்ஸவம் நடந்தது. இவ்வாறு சிவசைலபதியைப் பூஜித்து தந்து ஆயுளின் முடிவில் சிவஸாயுஜ்யம் அடைந்தான். பிறகு குமாரன் பல வருஷங்கள் அரசனாக ராஜ்யத்தை பரிபாலித்துக் கொண்டு எல்லோராலும் பூஜிக்கப்பட்டு விளங்கினான். முனிவர்களே, நீங்கள் கேட்டபடி கலியின் ஆரம்பத்தில் மனிதர்களால் சிவசைலபதி பூஜிக்கப்பட்ட விருத்தாந்தம் சொன்னேன்.

            பத்தாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 9

ஒன்பதாவது அத்யாயம்.
ரிஷிகள் கூறுகிறார்கள்:- சிவசைலபதியை முதலில் ப்ரம்ஹா பூஜித்ததாகவும் , பிறகு முனிவர்கள் பூஜித்ததாகவும் கூறினீர்கள். முதன் முதலாக மனிதர்களால் எப்பொழுது பூஜிக்கப்பட்டார்? இந்த விபரத்தை எங்களுக்கு சொல்ல வேண்டும். சிவசைலபதியின் கதையை எவ்வளவு கேட்டாலும் மனதில் த்ருப்தி ஏற்படுவதில்லை. நாங்கள் மிகுந்த பாக்யசாலிகள். இவ்வாறு முனிவர்களால்  கேட்கப்பட்ட ஸூதர் மறுபடியும் சிவசைலபதியின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
மூவுலகங்களிலும் புகழ் வாய்ந்த ஸுதர்சனன் என்னும் பாண்ட்யராஜன் மணலூரில் வஸித்துக் கொண்டு அரஸாக்ஷி செய்து வந்தான். இவன் எல்லா சாஸ்த்ரங்களையும் அறிந்தவன். ப்ராம்ஹணர்களிடம் பக்தி உள்ளவன். உண்மையே பேசுவான். ப்ரஜைகளின் நன்மையில் ஈடுபட்டவன். ஒரு ப்ராணிக்கும் த்ரோஹம் செய்யமாட்டான். இரக்கமுள்ளவன். புலன்களை ஜயித்தவன். பெரியோர்களை ஸேவிப்பவன். கோபத்தை ஜயித்தவன். புத்திமான் அஸூயை இல்லாதவன். ஸந்தோஷமுள்ளவன். யாகம் செய்பவன். ஸாதுக்களுக்கு இருப்பிடம். சம்புவிடம் மிகுந்த பக்தியுடன் சிவதீக்ஷை பெற்றவன். எங்கும் சிவ ஸ்வரூபத்தை பார்ப்பவன்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த அரசனுக்கு குழந்தை இல்லை. குழந்தை பெறுவதற்காக அச்வமேதயாகம் செய்யவேண்டுமென்ற நல்ல எண்ணம் அரசனுக்கு உண்டாயிற்று. தனக்கு குருவான ஜமதக்னி முனிவரைக் கூப்பிட்டு தன் எண்ணத்தைத் தெரிவித்தான். இதைக் கேட்ட ஜமதக்னி முனிவர் ‘சக்ரவர்திகளால் அனுஷ்டிக்கப்படும் அச்வமேதயாகத்தில் தேவர்களால் இடையூறுகள் ஏற்படக்கூடும். அதிலும் பாபத்திற்கே உறவினரான கலி ஆக்ஷிசெலுத்தும் காலம் தார்மிக அரசர்களுக்கு பலவித துன்பங்கள் ஏற்படும். ஆகையால் வேறு யாகம் நடத்தலாம் என்பது என் எண்ணம்’ என்று கூறினார். இதைக்கேட்ட அரசன் ‘முக்யமாக அச்வமேதயாகம் சிவனுக்கு மிகுந்த ப்ரீதியைக் கொடுக்கக்கூடியது. ஈச்வரப் ப்ரஸாதத்தாலும் ப்ராம்ஹணர்களின் ஆசீர்வாதத்தாலும் யாகங்களில் சிறந்த அச்வமேதயாகத்தை ஸுலபமாக நடத்தலாம். தாங்கள் அனுமதி கொடுக்கவேண்டும்’ என்று சொன்னான்.அந்த ஸமயத்தில் மஹாராஜாவே உன்னால் அச்வமேதயாகத்தை நடத்த முடியும். ஆலோசிக்க வேண்டாம் உடனே யாகத்தை ஆரம்பம் செய். என்று ஆகாயத்தில் அசரீரி வாக்கு கேட்டது. இதைக் கேட்ட அரசன் மிகவும் ஸந்தோஷம் அடைந்தான். பக்தியுடன் ஈசனை த்யானித்தான். ஜமதக்னி முனிவரும் ஆச்சர்யமடைந்து அரசனைப்பார்த்து ‘ஈச்வரனே உன்னிடம் ப்ரீதியுள்ளவராக இருக்கிறார். யாகம் நடைபெறட்டும். தாம்ரபர்ணீ நதிக்கரையில் யக்ஞசாலை நிர்மாணம் செய்யப்படட்டும். மந்த்ரிகள் எல்லா ஸாமக்ரிகளையும் சேகரிக்கட்டும். சாஸ்த்ரப்படி இடையூறு நீங்க சாந்திகள் நடத்தப்படட்டும். திறமையுள்ள வீரனின் பொறுப்பில் குதிரையானது உபாத்யாயருடன் (பூப்ரதக்ஷிணத்திற்காக) விடப்படட்டும். என்று சொன்னார். எல்லா மந்த்ரிகளும் குருவின் உத்தரவுப்படி எல்லா காரியங்களையும் செய்து தெரிவித்தார்கள். (அச்வமேதயாகத்தில் பூப்ரதக்ஷிணத்திற்காக குதிரையை அவிழ்த்துவிட வேண்டும். குதிரையுடன் ப்ரதானவீரன், ஸைன்யம், உபாத்யாயர், ரித்விக்குகள் எல்லோரும் செல்ல வேண்டும். குதிரை யாராலும் தாக்கப்படாமல் ஒருவிதத் தீங்கும் இல்லாமல் திரும்பி வரவேணும். பிறகுதான் யாகத்தை நடத்தலாம் என்பது விதி).
 பிறகு அரசன் புரோஹிதரான ஜமதக்னியை வணங்கி புத்ரனைப் பெறுவதற்காக அச்வமேதயாகத்தை நடத்திவைக்க வேண்டுமென்று ப்ரார்த்தித்தார். ஜமதக்னி அரசன் அபிப்ராயம் அறிந்து வஸந்தருதுவில் முனிவர்களுடன் யாகத்தை ஆரம்பித்தார். உபாத்யாயருடன்கூட நல்ல லக்ஷணமுள்ள குதிரையை விடுத்தார். இந்த யக்ஞ்த்தை தர்சிப்பதற்காக தத்வமறிந்த முனிவர்கள், அரசர்கள், ப்ராம்ஹணர், க்ஷ்த்ரியர், வைச்யர், எல்லோரும் பல தேசங்களிலிருந்து அங்கு வந்து கூடிவிட்டார்கள். சாஸ்த்ரமுறைப்படி யாவரும் அதிசயிக்கத்தக்க முறையில் யாகம் நடந்தது. ஸுதர்சன ராஜாவின் தம்பியும் ஒப்பற்ற பலமுள்ளவனும் தார்மிகனுமான ஸத்யகீர்த்தி அச்வமேதக் குதிரயை நடத்திச் சென்றான். முதலில் குதிரையை கிழக்கு திசையில் நடத்திச் சென்று அங்குள்ளவர்கள் யாவரையும் ஸ்வவசப்படுத்தி பிறகு தென் திசை சென்றான். அங்கு உள்ள அரசர்கள் அவனையும், குதிரையையும் வணங்கி அவனுக்கு உட்பட்டுவிட்டார்கள். பிறகு மனதில் சிறிதும் பயம் இல்லாமல் மேற்கு திசையில் பல இடங்களுக்குச் சென்று சிவசைலம் வந்தான்.
 சிவசைலபதி தன் பக்தனை பரிசோதித்து ப்ரியத்தைச் செய்வதற்காக ஸுப்ரம்ஹண்யரைப் பார்த்து குதிரையைப் பிடித்துக் கட்டு என்றார். ஈசனின் உத்தரவுப்படி ஸ்கந்தர் முனிகுமார வேஷத்துடன் அங்கு வந்து விளையாட்டாக அச்வமேதக் குதிரையை மரத்தடியில் கட்டி விட்டார். ப்ராம்ஹணச் சிறுவனுடையச் செய்கையைக் கண்டு ஸேநா வீரர்களும் ஸத்யகீர்த்தியும் ஆச்சர்யமடைந்தனர். ஹேமுனிகுமாரனே தாமதியாமல் உடனே யாகக் குதிரையை அவிழ்த்துவிடு விளையாட்டு போதும் என்று கூறினார்கள். இதைக் கேட்டு முருகன் ‘ வீரர்களாக தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நீங்கள் என்னுடன் போர்புரிந்து என்னை ஜயித்த பிறகு குதிரையை விடுவித்துக் கொண்டு போகலாம் இல்லாவிடில் நான் குதிரையை விடுவிக்கமாட்டேன்’ என்றான்.
  இதைக் கேட்ட வீரர்கள் ‘இந்த ப்ராம்ஹண குமாரன் சக்தி ஆயுதத்துடன் யுத்தத்திற்கு வந்திருக்கிறான் நம்மைக் கொல்ல வந்த இவனைக் கொல்வதால் பாபமில்லை’ என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு கத்தி, சூலம், பரசு முதலிய ஆயுதங்களால் குஹனையடித்தனர். இவை அவனைத் தாக்கவில்லை மலைபோல் அசைவற்று இருந்தான். பிறகு குஹன் ஸிம்ஹம் சிறிய மிருகங்களைப் போலவும், கருடன் பாம்புகளைப் போலவும், சக்தி ஆயுதத்தால் ஸேநா வீரர்களையடித்தார். சக்தி ஆயுதத்தால் அடிக்கப்பட்ட வீரர்கள் யாவரும் ஆயிரக்கணக்காக பூமியில் விழுந்தனர்.
  இதைக் கண்டு ஸத்யகீர்த்தி ப்ராம்ஹணபந்துவே சிறுவனே சீக்கிரம் குதிரையை விட்டுவிடு. இல்லாவிட்டால் உன்னைக் கொல்வேன். அரசர்களுக்குக் கருணை எப்போதும் இருக்காது. என்று கூறி குஹன் பேரில் ஐந்து அம்புகளை விட்டான். உடனே கோபம் கொண்ட மஹாஸேநர் சக்தி ஆயுதத்தால் அவனை அடித்தார். சக்தி ஆயுதத்தால் உடல் பிளக்கப்பட்டு ஸத்யகீர்த்தி பூமியில் விழுந்தான். உடனே மிஞ்சியிருந்த வீரர்கள் மண்லூருபுரம் சென்று அரசரிடம் எல்லா வ்ருத்தாந்தங்களையும் கூறினார்கள்.
இதைக் கேட்ட அரசன் ஸுதர்சனன் சதுரங்க ஸைன்யத்துடனும், மந்த்ரிகளுடனும் அங்கு வந்தார். முனி வேஷம் தரித்தவனும் காந்தியுள்ளவனும் எல்லா லக்ஷணங்களும் பொருந்தி கோடி மன்மதர்களின் அழகு வாய்ந்தவரும், எல்லாம் அறிந்தவரும், கருணைக்கடலும், ஈச்வரகுமாரனுமான குஹனைப் பார்த்து அவருடைய ஒளியால் தாக்கப்பட்டு ப்ரீதியுடன் கேட்டான்.
  அழகு நிறைந்தவனும் சிறுவனுமான நீ யார்? எந்த மஹர்ஷியின் குமாரன்? உண்மையைச் சொல்? இவ்வாறு கேட்ட அரசனைப் பார்த்து குஹன் ‘அரசனே! யுத்தம் செய்ய வந்த வீரர்கள் வீணாக புகழுரைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். நான் யாராயிருந்தால் என்ன? நீ வீரனாக இருந்தால் யுத்தம் செய்’ என்று சொன்னான். இதைக் கேட்டு ஸுதர்சனன் கோபம் கொண்டவனாய் தன் சைன்யங்களை ஏவினான். தானும் அம்புகளை எறிந்தான். தேரிலும் குதிரைகளிலும் யானைகளிலும் அமர்ந்து படைகள் பூமியை அதிர்ச்சியடையச்செய்து கொல்ல எண்ணம் கொண்டவைகளாய் குஹனைஅ சுற்றி நான்கு புறமும் சூழ்ந்துகொண்டு எதிர்த்தன.
   இதைக்கண்ட பார்வதியின் குமாரனான குஹன் சக்தி ஆயுதத்தை எறிந்தான். அது தீப்பற்றிக்கொண்டு அந்த நிமிஷமே ஸைன்யம் முழுவதையும் சாம்பலாக்கிவிட்டது. ஸைன்யம் முழுவதும் நாசமடைந்தபின் ஸுதர்சனன் ஐந்த்ரம் , யாம்யம், ப்ராம்ஹம், கௌபேரம், வாருணம் முதலான எல்லா அஸ்த்ரங்களையும் விட்டான். தன் சக்தி ஆயுதத்தால் அவைகள் எல்லாவற்றையும் அழித்தான் குஹன். தன் வில் ஒடிந்து தேர், குதிரை, தேர்பாகன் அழிந்து சக்தி ஆயுதத்தால் மார்பு பிளக்கப்பட்டு அரசன் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார். வெகுநேரத்திற்குப்பின் ஞாபகம் வந்தது. ச்ரமமின்றி கம்பீரமான தோற்றத்துடன் நிற்கும் குமாரனைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார். சிறிது நேரம் பரமேச்வரனை த்யானம் செய்து கடநா நதியில் ஸ்நாநம் செய்து ஷடக்ஷர [பீஜஸஹிதமான பஞ்சாக்ஷர] மந்த்ரத்தை ஜபம் செய்து பார்வதீ ஸ்கந்தர் விநாயகர் இவர்களுடன் கூடிய சிவசைலபதியை மாநஸ உபசாரங்களால் பூஜித்து பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
  “துன்பங்களைப் போக்குபவரும், ஒளிஸ்வரூபரும் பசுக்களுக்கு [ஜீவர்களுக்கு] பதியும் யாகம் செய்கிறவர்களுக்கு தலைவரும் யக்ஞபதியும் மங்கள ரூபியும் அம்பிகையுடனும் கணங்களுடனும், புத்ரர்களுடனும் கூடியவருமான உமக்கு நமஸ்காரம், மஹாதேவா, சங்கரா, சரணமடைந்த என்னை கருணையால் காப்பாற்றவேணும்” இவ்வாறு துதித்து விட்டு பக்திபரவசராய் சிவஸன்னிதியில் இருந்தார்.
    அப்பொழுது அழகுக்கு இருப்பிடமான சம்புவானவர் கைலாஸாசலம் போன்ற வெண்மையான வ்ருஷபவாஹனத்தில் அமர்ந்து நந்தி, குண்டோதரன் முதலான எல்லா கணங்களுடன் அரசனுக்கு முன்னால் தோன்றி தர்சனம் கொடுத்து தாமரை போன்ற முக மலர்ச்சியுடன் அரசனை ஆனந்தமுறச்செய்து மேகம்போல் கம்பீரமாகக் கூறினார்.
     ஒன்பதாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 8

எட்டாவது அத்யாயம்
ரிஷிகள் கூறுகிறார்கள்:- கோபம் கொண்ட பார்வதி சிவசைலபதியின் ஸந்நிதிக்கு வந்ததும் அவளுக்கு சிவன் தன் பாதிசரீரம் கொடுத்ததும் விபரமாகச் சொல்ல வேண்டும். இதக் கேட்க எங்களுக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.
இவ்வாறு ப்ரார்த்திக்கப்பட்ட ஸூதர் தன் வார்த்தையால் முனிவர்களை ஸந்தோஷப் படுத்துகிறவராக தேவிக்கு ஸ்ந்தோஷம் ஏற்பட்டதன் காரணத்தைச் சொன்னார்.
பார்வதி தவம் செய்யும் பொழுது கருணாநிதியான ஈசுவரன் பார்வதியின் பிரிவைத் தாங்கமுடியாமல் அதனால் துன்பமுற்றவராய் உண்மையே பேசுகின்றவளும் தர்மசீலையுமான அத்ரியின் பத்னி அநசூயையைக் கூப்பிட்டு தேவியை ஸமாதானப்படுத்துவதற்காக அவளை அனுப்பிகிறவராய்ச் சொன்னார்.
“ ஹே அநஸூயா தேவியே! பார்வதியின் பிரிவால் உண்டான வேதனையைத் தாங்கமுடியவில்லை. துஷ்டனான மன்மதன் முன் விரோதத்தை நினைத்துக் கொண்டு முன்னால் அவன் சரீரத்தில்க் என் கண்ணால் செய்த கார்யத்தை என் மனதில் பாணத்தால் செய்கிறான். எப்பொழுதும் அவனுடைய ஐந்து அம்புகளுக்கும் என்னை இலக்காக்குகிறான். அவளை அழைத்து வருவதற்காக நான் அனுப்பிய கங்கை இன்னும் திரும்பிவரவில்லை. ஆகையால் நீ அவள் தவம் செய்யும் இடம் சென்று ஸமாதானமாயும் ப்ரியமாயும் இனிமையாயும் மனதைக் கவரும்படியான வாக்யங்களால் அவளை ஸமாதானப்படுத்தி இங்கு அழைத்து வா.
  இவ்வாறு சம்புவால் சொல்லப்பட்ட பதிவ்ரதையான அநஸூயை பார்வதி தவம் செய்யுமிடம் சென்று மெதுவாக ஸமாதானப்ப்டுத்தினாள். “ஹே கல்யாணீ! நீ சிவசைலேசன் ஸந்நிதிக்கு வரவேணும். ஹே புவனேச்வரீ! நீங்கள் இல்லாமல் சிவன் சூன்யர் போல் தோன்றுகிறார். அவர் ஸச்சிதானந்த ரூபராயிருந்தாலும் உன்னுடன் கூடியிருந்தால்தான் நன்கு விளங்குவார். உன் பிரிவால் அவருக்கு இரவில் தூக்கமில்லை. சாப்பிடுவதில்லை. உன்னிடமே மனதை செலுத்தி எப்பொழுதும் த்யானம் செய்கிறார். “ஹே ப்ரியே, கல்யாணீ எங்கு சென்றுவிட்டாய் என்று உன்னை பற்றியே பேசுகிறார். இவ்வாறு ஸ்மாதானப்படுத்திய அனஸூயையைப் பார்த்து தேவி சொல்கிறாள்.
 அனஸூயாதேவியே ! எனக்கு சிவனின் பாதி சரீரம் கிடைக்கும் வரை தவம் செய்வேன். இப்பொழுது சிவசைலேசரின் ஸந்நிதிக்கு வரப்போவதில்லை. நீ அத்ரி முனிவருடன் கலந்து யோஜித்து எனக்கு சிவனுடைய பாதி சரீரம் கிடைப்பதற்கு உபாயம் சொல்லவேணும்.
இந்த ஸமயம் அத்ரி முனிவர் கௌதமர் முதலான முனிவர்களுடன் தேவியை தரிஸிப்பதற்கு யத்ருச்சையாக அங்கு வந்தார். தவம் செய்யும் தேவியை ஷோடசோபசாரங்களால் பூஜித்து பக்தியுடன் வணங்கினார். அநஸூயை தந்து கணவரான அத்ரிமுனிவரிடம் பார்வதியின் விருப்பத்தைத் தெரிவித்தாள். உடனே அத்ரிமுனிவர் சிறிது நேரம் த்யானித்து விட்டு பிறகு தேவியைப் பார்த்து சொல்கிறார்.
  “ஹே மஹாதேவி ! ஈச்வரனுடைய பாதி தேஹம் அடைவதற்கு ஓர் உபாயமுள்ளது. கேதாரவ்ரதம் என்பது சிவனுக்கு மிகவும் ப்ரீதியைக் கொடுக்கக்கூடியது. இந்த வ்ரதத்தை அனுஷ்டானம் செய்தால் இதனால் ஸந்தோஷமடைந்து பரமேச்வரன் கட்டாயம் உனக்கு தன்னுடைய பாதி சரீரத்தைக் கொடுப்பார். இது உண்மை.” இவ்வாறு கூறிய அத்ரிமுனிவரையும் தர்மமறிந்த அனஸூயையையும் வணங்கி தேவி கூறுகிறாள். {தனக்குத் தெரிந்தும் தான் உபதேசிக்காமல் அனஸூயை தன் பர்த்தாவைக் கொண்டு கேதாரவ்ரதத்தை உபதேசிக்கும்படி செய்ததன் மூலம் தன் பதிவ்ரதா தர்மத்தை காட்டியதால் “தர்மக்ஞா” என்று கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.} ஹிமவானுக்குப் போல் உங்களுக்கும் நான் பெண்ணாக ஆய்விட்டேன். கேதார விரதத்தை அனுஷ்டிக்கும் விதிமுறைகளைக் கூற வேண்டும் என்று கேட்ட தேவிக்கு அத்ரிமுனிவர் எல்லாவற்றையும் கூறினார்.
     அத்ரிமுனிவரிடம் கேட்டு விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு பார்வதீதேவி பாத்ரபதமாதம் சுக்லபக்ஷ அஷ்டமியன்று ஆரம்பித்து 21 நாட்கள் கேதாரநாதரைப் பூஜித்து உபவாஸ நியமத்தைக் கைக்கொண்டு 21 ஸூத்ரங்களால் செய்த ப்ரதிஸரத்தை{காப்பை}க் கட்டிக்கொண்டு வ்ரதானுஷ்டானம் செய்தாள். பாத்ரபத க்ருஷ்ண சதுர்த்தியன்று அனஸூயையுடன் கேதாரநாதரை விதிப்படி பூஜித்து கையில் தோரகத்தை {சரடு} கட்டிக்கொண்டு சிவனை வணங்கினாள். {இங்கு பார்வதிக்கு அனஸூயை சரடு கட்டியிருக்கலாம்}.     

உடனே கோடி சந்திரர்களின் காந்தியுள்ளவரும் மிக்க அழகியவரும் கைகளில் மான், உளி, வரம், அபயம் இவைகளைத் தாங்கியவரும் விருஷப வாஹனத்தில் அமர்ந்திருப்பவருமான பரமேசன் எல்லா தேவர்களுடனும் பரிவாரங்களுடனும் தேவியின் முன் தோன்றி பிரஸந்நமான முகத்துடன் தேவியைக் கூப்பிட்டு “ கல்யாணீ! உன் விரதத்தாலும், தவத்தாலும் நியமத்தாலும் நான் ஸந்தோஷமடைந்திருக்கிறேன். என் சரீரத்தில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன். ஸூரியனோடு ஒளி சேர்ந்திருப்பது போல் நீ எப்போதும் என்னுடன் சேர்ந்திருக்கிறாய். நீ என்னைக் காட்டிலும் வேறல்ல. ஆனாலும் இப்பொழுது சரீரார்த்தத்தைக் கொடுக்கிறேன். ஸந்தோஷத்துடன் பிரஸன்னனான என்னைப் பார்! “ என்று கூறினார். இதைக் கேட்டு மனதில் ஸந்தோஷம் நிறைந்தவளாய் பார்வதி திரும்பத் திரும்ப பரமேசனைப் பார்த்தாள். தேவி ஸந்தோஷத்துடன் இருப்பதை அறிந்த சிவசைலபதி ஹே கல்யாணி ! வா, நாம் நமக்கு பிரியமான சிவசைல ஸ்தலத்திற்குப் போவோம் என்று கூறி அம்பிகையை தனது இடது மடியில் ஏற்றி வைத்துக் கொண்டு சிவசைலஸ்தலம் சென்று அவளுடன் இன்புற்றிருந்தார். முனிவர்களே! தேவியின் ஸந்தோஷத்திற்கு காரணமான இச்சரித்திரத்தை உங்களுக்கு சொன்னேன். வேறு என்ன கேட்க விரும்புகிறீர்கள், என்று ஸூதமுனிவர் கேட்டார்.


        எட்டாவது அத்யாயம் முற்றும் 

சிவசைலம் - 7

          ஏழாவது அத்யாயம்
அநேகமாக எல்லா ப்ரதேசங்களிலும் சிவலிங்கங்கள் கிழக்குப்
பார்த்து இருக்கின்றன. இந்த ஸ்வயம்பூ லிங்கரூபியான சிவசைலபதி , எந்தக் காரணத்தினால் மேற்குத் திசையைப் பார்த்து இருக்கிறார்?. உலகங்களால் பூஜிக்கப்பட்ட பார்வதி தேவி சிவசைலபதிக்குப் பத்னியாக அமைந்து எந்தக் காரணத்தினால் ‘கல்யாணீ’ என்ற பெயரையடைந்தாள்?.
வியாஸருடைய அனுக்ரஹத்தாலும் சிவபக்தியினாலும் நீர் ஸகலத்தையும் அறிந்தவர். மூன்று லோகங்களையும் அறிந்தவர். ஆகையால் இந்த விசேஷங்களை விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும். என்று முனிவர்களால் வேண்டிக் கொள்ளப் பட்ட ஸூதமுனிவர் கல்யாணீபதியான சிவசைலபதியை மனதில் தியானித்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.
ஸூதமுனிவர் கூறுகிறார்:- முன்னொரு ஸமயத்தில் சிவசைல ஸ்தலத்தில் பரமேச்வரன் பார்வதியுடனும் பிரமத கணங்களுடனும் சேர்ந்து அமர்ந்திருந்து எல்லோருக்கும் தர்சனம் கொடுத்தார். அப்பொழுது ப்ரஹ்மா முதலிய தேவர்கள், இந்திரன் முதலிய 8 திக்பாலகர்கள், 12 ஆதித்யர்கள், 8 வஸுக்கள், 11(அநேக)ருத்ரர்கள், ஸித்தர்கள்,கந்தர்வர்கள்,கின்னரர்கள்,வஸிஷ்டர் முதலிய ப்ரஹ்ம ரிஷிகள், நாரதர் முதலிய தேவரிஷிகள்,கங்கா முதலிய நதீ தேவதைகள், ஊர்வசீ முதலான தேவ ஸ்த்ரீகள், ஓங்காராதி தேவதைகள், வேதங்கள் இவர்கள் ஆவலுடன் சிவ தர்சனம் செய்ய வந்திருந்தார்கள். எல்லாரும் பரமேச்வரரை வணங்கி அநேக ஸ்தோத்ரங்களால் ஸ்தோத்ரம் செய்து இருபக்கங்களிலும் பரமேச்வரருடைய முகத்தைப் பார்ப்பதற்காக நின்றார்கள். ப்ரஸந்நமான பார்வதீகாந்தனை தர்சனம் செய்து கிருதார்த்தர்களாக எண்ணினார்கள்.
பரமேச்வரருக்கு மிகவும் பிரியமான கணத்தலைவர் ‘ப்ருங்கிடி’ என்பவர். மிகவும் ஹாஸ்யங்களால் நிரம்பியதும் விசித்ரமானதுகளுமான செய்கைகளால் பரமேச்வரரை ஸந்தோஷப்படுத்தி சிவனிடம் விடைபெற்றுக் கொண்டு செல்லும்பொழுது அம்பிகையையும் சேர்த்துப் பிரதக்ஷிணம் செய்யாமல் சிவனை மட்டும் பிரதக்ஷிணம் செய்து விட்டு, அம்பிகையை விட்டு பரமேச்வரனை மட்டும் நமஸ்கரித்து ஸ்தோத்ரம் செய்து மெளனமாக நின்றார்.
இதைக் கண்டு பார்வ்வதீ தேவியானவள் தன் பர்த்தாவாகிய பரமேச்வரரைப் பார்த்து “கணங்களின் தலைவரான பிருங்கிடி மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?. எதற்காக இந்தக் காரியத்தைச் செய்தான்?. ( என்னை விட்டு தங்களை மட்டும் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டிய காரணம் என்ன?.)“ என்று கேட்டாள்.

அதைக்கேட்டு பரமேச்வரர் சிரித்துக் கொண்டு பார்வ்வதியைப் பார்த்துச் சொல்கிறார்:- “ உன்னையும் என்னையும் நன்றாகக் கவனித்து ஆலோசித்து, என்னை மட்டும் அண்டியவர்கள் வணங்கிக் காரிய ஸித்தியை அடைகிறார்கள். உன்னால் பிரயோஜனமில்லை என்பதையறிந்து (எல்லோருக்கும் இது தெரியட்டும் என்று) செய்தார். (என்னாலேயே கார்ய ஸித்தி ஏற்படும் பொழுது அதிகப்படி உன்னையும் ஸேவிக்க வேண்டியதில்லை) “ இவ்வாறு பரமேச்வரனால் சொல்லப்பட்ட ஜகத்ஸ்வரூபிணியான பார்வதீதேவி கோபமடைந்து கணதேவனாகிய பிருங்கிரிடியின் சரீரத்திலிருக்கும் சக்தியை அபஹரித்து விட்டாள்.சக்தியற்ற கணாபனாகிய பிருங்கிரிடி தேஹபலமற்று கீழே விழுந்தான். பார்வதியும் மேற்குத்திசை சென்றுவிட்டாள்.
பரமேச்வரன் பார்வதியை ஸமாதானம் செய்வதற்காக மேற்குமுகமாக ஆனார். ஸமாதானம் செய்வதற்கு கங்காதி நதிகளை அனுப்பினார். தானும் கூப்பிட்டார். “ ஹே கல்யாணீ! பார்வதீ! நீ எனக்குப் பிரியமானவள் அல்லவா! ஏன் கோபமடைந்து விட்டாய்?. நான் பரிஹாஸமாகச் சொன்ன வார்த்தையல்லவோ?. கோபம் வேண்டாம். வருவாயாக. இது பரிஹாஸம் என்பதை நீ அறியவில்லை. உண்மையென்று நினைத்துக் கொண்டுவிட்டால் கோபம் வேண்டாம், கட்டாயம் வர வேண்டும். “ இவ்விதம் அநேக விதமாகப் பேசியும் ஸமாதானம் அடையவில்லை. (பார்வதியானவள் தான் தனிப்பட்ட மூர்த்தியாக இருந்ததால் தான் நம்மை விலக்கிவைக்கிறார்கள்.பரமேச்வரனுடைய பாதி சரீரமாகவே ஆகிவிட்டால் நம்மை விடமுடியாதல்லவா என்ற எண்ணத்துடன்) பரமேச்வரருடைய பாதி சரீரத்தையடைய வேண்டியதற்காக அத்ரி மஹரிஷியின் ஆச்ரமத்தின் மேல்புறத்தில் கடுமையான தபஸ் செய்தாள்.
கங்காதேவியும் பரமேச்வரருக்கு ப்ரியம் செய்ய வேண்டுமென்ற விருப்பத்துடன் நதிரூபமாகவே வந்தாள்.
அப்பொழுது வந்தவர்களான கெளதமர் முதலிய மஹரிஷிகளும், அத்ரி முனிவர் முதலியவர்களும் கங்காதேவியைப் பூஜித்தார்கள். கங்காதேவியும் அங்கேயே வாஸம் செய்தாள். எல்லோரும் கேட்கும்படியாகவே கங்காதேவியானவள் பார்வதியை ஸமாதானம் செய்தாள். ஆனால் முடியவில்லை.
பரமெச்வரனே நேரில் ஆவிர்பவித்து “ ஹே கல்யாணீ “ என்று ஆஹ்வானம் செய்தார். அது முதல் பகவானும் மேற்குமுகமாக இருந்தார். பார்வதியும் அதுமுதல் கல்யாணீ என்ற நாமதேயத்தை அடைந்தாள். ஸ்ரீஸ்வரூபிணியான பார்வதியும் தபஸ் செய்யும் காரணமாக அங்கு வஸித்து வந்தாள்.
அதனால் சிவசைலம், ஸ்ரீசைலம் என்ற பெயரையும் அடைந்தது.
இவ்வாறு சிவசைலநாதர் மேற்குமுகமாக இருப்பதம் காரணமும், தேவிக்கு கல்யாணி என்ற பெயரை ஈசுவரன் கொடுத்ததும் விபரமாக சொல்லப் பட்டது. மேலும் எதைக் கேட்க விரும்புறீர்கள்’ என்று ஸூதர் சொன்னார்.

           ஏழாவது அத்யாயம் முற்றும்.

Tuesday, January 27, 2015

சிவசைலம் - 6

ஆறாவது அத்யாயம்.
சௌநகாதி முனிவர்கள் ஸூதரைப் பார்த்துக் கூறுகிறார்கள்:-- முனிச்ரேஷ்டரே அநாதி சிவசைலேசர் என்று சம்புவால் சொல்லப்பட்டதாக உங்கள்முகமாகக் கேள்விப்பட்டோம். அது எப்படி? அது எப்படி அநாதியாயுள்ளது? இப்பொழுது தத்வத்தை சொல்ல வேணும். மேலும் எந்த யுகத்தில் ஹரன் யாருக்கு ப்ரியத்தைச் செய்வதர்காகத் தானாகவே எப்படி ஸ்வயம்புலிங்கமாகத் தோன்றினார்? யாரால் பூஜிக்கப்பட்டார்? எல்லாவற்றையும் சொல்ல வேணும்.
 இவ்வாறு கேட்கப்பட்ட ஸூதமுனிவர், சௌனகாதி ரிஷிகளை ஸந்தோஷப்படுத்திக்கொண்டு முன்காலத்தில் நடந்த சிவமாஹாத்ம்யத்தை சொன்னார். உலகில் சிவபக்தர்களான நீங்கள் விஷேசமாக பாக்யசாலிகள். ஏனெனில் புதிதுபுதிதான சிவகதைகளை அடிக்கடி கேட்கிறீர்கள். கல்பத்தின் ஆரம்பத்தில் பகவான் ப்ரம்ஹா உலகை ஸ்ருஷ்டிக்க முயற்சித்தும் சக்தியில்லாதவராக மோஹமடைந்தார். ப்ரம்ஹாவுக்கு கவலை ஏற்பட்டது. உலகைப் படைக்கும் காரியத்தில் ஏவப்பட்டிருக்கிறேன். நான் என்ன செய்வென்? இப்பொழுது ஸ்ருஷ்டியில் என் புத்தி செல்லவில்லையே ! அந்த புத்தி மழுங்கிவிட்டதே? என்ன காரணம்? இவ்வாறு அவர் ஆலோசிக்கும் பொழுது அசரீரி வாக் உண்டாயிற்று.
  “ஏ! ப்ரம்ஹாவே கவலைப்படவேண்டாம். தெற்கு ஸமுத்ரத்தின் கரையில் மலயபர்வதத்தின் வடக்குக் கரையில் “சிவசைலம்” என்ற ஒரு பர்வதம் இருக்கிறது. அதற்கு கிழக்கு பாகத்தில் இருந்து கொண்டு தவம் செய்யும். அது மிகவும் புன்ண்யமான் ப்ரதேசம் . மனதிற்கு சுத்தியை {சாந்தியை}க் கொடுக்கக்கூடியது. அங்கு லிங்க வடிவமாக ஆவிர்பாவம்செய்து ஸ்ருஷ்டி செய்வதற்குரிய உபாயத்தைச் சொல்கிறேன்”.
  ப்ரம்ஹா அதைக்கேட்டு மிகவும் ஆச்சர்யத்தை அடைந்தார்.! தேவச்ரேஷ்டரான ப்ரஹ்மா அங்கு சென்று கடுமையான தபஸ்ஸைச் செய்தார். மிகவும் கருணாநிதியான பரமேச்வரரும் லிங்கரூபியாக ஆவிர்பவித்தார். ப்ரஹ்மா தன்முன் ஸ்வயமாக ஆவிர்பாவம் அடைந்த லிங்க பரமேச்வரரைப் பார்த்து மயிர்க் கூச்ச அடைந்த சரீரத்துடன் ஸ்தோத்ரம் செய்ய ஆரம்பித்தார்.
ப்ரஹ்மா கூறுகிறார் :- தாங்கள் எப்பொழுதும் மங்களத்தைச் செய்பவர். ( ஸர்வமங்களா என்று சொல்லக் கூடிய ) அம்பாளுடன் கூடியவர். மிகவும் ச்ரேஷ்டமானவர். பரமாத்ம ஸ்வரூபர் தாங்கள் தான்.
தன் ஆத்மாவில் அளவற்ற குணங்கள் மறைவாக இருந்து கொண்டே மிகவும் பிரகாசமான மஹிமையுடவர். ஸர்வக்ஞராக ப்ரஹ்மஸ்வரூபியாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். தாங்கள் எப்பொழுதும் கலப்பற்ற ஸத்வகுணம் பொருந்தியவர். உலகங்களுக்கெல்லாம் மேலானவர். (ஜங்கமஸ்தாவரமான ஸகல உலகங்களையும் வியாபித்தவர்.)                 
அணுவிலும் அணுவானவர். பெரிதுக்கும் பெரிதானவர். தங்களுக்கு நமஸ்காரம்.
இவ்வாறு பரமேச்வரனை ஸ்தோத்ரம் செய்தார். ப்ரஹ்மா ஸ்ருஷ்டி ஸாமர்த்யத்தை அடைந்து முன் போல் ஜகத்தை ஸ்ருஷ்டி செய்து மிகவும் ஸந்தோஷமடைந்தார். (இங்கு ப்ரஹ்மா பரமேச்வரனை வணங்காமல் ஒரு கார்யத்தை ஆரம்பித்ததனால் இந்தமாதிரி ஏற்பட்டதென்று தெரியவருகிறது. எந்த கார்யம் ஆரம்பித்தாலும் ஈச்வரனை ப்ரார்த்தித்துவிட்டுத் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.)
அம்பிகை – பரமேச்வரர் இருவருக்கும் ப்ரஹ்மாவானவர் ஆலயம் நிர்மாணம் செய்தார். 16 உபசாரங்களால் பூஜை செய்தார். வஸந்த ருதுவின் ஆரம்பத்தில் சிவசைலத்தில் த்வஜாரோஹணத்துடன் மஹோத்ஸவம் ப்ரஹ்மாவினால் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று உலகங்களிலிருக்கும் ஜனங்களால் உத்ஸவம் மிகவும் கொண்டாடப்பட்டது. உத்ஸவ முடிவில் அவப்ருத ஸ்நானம் செய்து மிகவும் பக்தியுடன் பூஜித்துத் தண்டம் போல் விழுந்து பரமேச்வரனை நமஸ்காரம் செய்து ப்ரஹ்மா சொன்னதாவது:-
“ கல்பத்தின் ஆரம்பத்தில் சிவசைலம் என்ற பிரதேசத்தில் எனக்குப் பரமேச்வரனான நீர் ஸ்வயம்பூ லிங்க ரூபமாக ஆவிர்பவித்து ஸ்ருஷ்டி செய்யும் உபாயத்தைச் சொன்னீர். அதனால்
“ அநாதி சிவசைலேசர் “ என்ற ப்ரஸித்தியுடன் நீர் விளங்க வேணும். உம் ஆக்ஞைகளை நிறைவேற்றுவதற்காக என் இருப்பிடமான ப்ரஹ்ம லோகம் போகிறேன் “ என்று விடை பெற்றுக் கொண்டு ப்ரஹ்மா மிகவும் க்ருதார்த்தராகத் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். அநாதி சிவசைலேசர் இவ்விதமான மஹிமையுள்ளவர். ஆதி காலத்திலேயே இது ஏற்பட்டிருப்பதால் “ஆதி சைலேசர்” என்ற பிரஸித்தியும் ஏற்பட்டது. முனிவர்களே, தாங்கள் எதெதைக் கேட்டீர்களோ அவைகளையெல்லாம் சொல்லி விட்டேன்.

     ஆறாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 5

 ஐந்தாவது அத்யாயம்.
சிவன் கூறுகிறார் :-- மூன்று ஸ்தலங்களைப் பற்றிக் கூறுகிறேன் ஸாவதானமாகக் கேளும் முதலாவது க்ஷேத்ரங்களுக்குள் மிகச் சிறந்ததான சிவசைலம். இரண்டாவது க்ஷேத்ரத்தின் மஹிமையை கேளும்.
   முன் ஒரு காலத்தில் இந்த்ரன் பிள்ளையான வாலி ஸூர்யன் குமாரனான ஸுக்ரீவனால் {யுத்தத்தில்} தோற்கடிக்கப்பட்டு எதிரியின் பாதி பலத்தை அடையவேணும் என்ற ஆசையால் தவம் செய்தான். மனதை அடக்கி ஸ்வயம்புலிங்கத்தில் என்னை பூஜை செய்தான். கடுமையாக தவம் செய்வதைப் பார்த்து நான் ஸந்தோஷத்துடன், அவன் முகத்தைப் பார்க்கும் எதிரிகளின் பாதி பலம் இவனை அடையும்படி வேறு யாருக்கும் கிடைக்காத வரத்தைக் கொடுத்து வாலியால் பூஜிக்கப்பட்ட புராதனமான லிங்கத்தில் ‘வாலிநாதர்’ என்ற பெயருடன் வஸிக்கிறேன். இதை மோக்ஷத்தைக் கொடுக்கும் இரண்டாவது க்ஷேத்ரமாக அறிந்து கொள்ளும். {இந்த க்ஷேத்ரம் இப்பொழுது “திருவாலீச்வரம்” என்ற பெயருடன் விளங்குகிறது}, இனி க்ஷேத்ரங்களுக்குள் சிறந்த மூன்றாவது க்ஷேத்ரத்தைப் பற்றிக் கூறுகிறேன்.
  முன் ஒரு ஸமயம் க்ருதயுகத்தில் ப்ரம்ஹாவால் பூஜிக்கப்படதும் பிறகு ஒவ்வொரு யுகத்தின் ஆரம்பத்திலும் அனேகம் ப்ரம்ஹாக்களால் பூஜிக்கப்பட்டதுமான க்ஷேத்ரத்தை “ப்ரம்ஹவ்ருத்தபுரம்” என்றும் ப்ரம்ஹதேசம்  என்றும் வித்வான்கள் சொல்கிறார்கள். இங்கு ப்ரம்ஹபுத்ரரான ரோமசமஹர்ஷியால் பூஜிக்கப்பட்டு மிகச் சிறப்பான நித்யத்வத்தை {சாவற்ற தன்மையை} அவருக்குக் கொடுத்து தேவர்கள், சித்தர்கள், வேதம் அறிந்தவர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்டதும் , மனதைக் கவருவதும் அழகிய மலர்ச் செடிகளுடன் கூடியதும் கைலாஸபர்வதத்தைக் காட்டிலும் நன்மையைத் தருவதுமான இந்த க்ஷேத்ரத்தில் வாஸம் செய்வதால் சாஸ்த்ரஸித்தாந்தத்தின் ரஹஸ்யமறிந்த முனிவர்கள் இங்கு என்னை “கைலாஸநாதர்” என்று புகழுகிறார்கள் கைலாஸ பர்வதத்திற்கொப்பான இந்த க்ஷேத்ரத்தை மூன்றாவதாக தெரிந்துகொள். இங்கு மூன்று நாட்கள் வஸிப்பவர்களுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களும் கிடைக்கும். தேவர்களால் புகழப்பட்ட இது தேவபூமிக்கு ஸமமானது.
மஹரிஷியே, மற்றொரு ஆச்சரியத்தக் கேள். ப்ரஹ்மா ஓர் ப்ரதிக்ஞை செய்துள்ளார்.
” கங்கா நதி “ ‘கடநா’ என்ற பெயருடன் ப்ரஹ்மவிருத்தபுர ( ப்ரஹ்ம தேச ) த்தின் அருகில் வெகுகாலம் கழித்து விளங்கட்டும். என்னால் சிவன் பூஜிக்கத்தக்கவரானால் அங்கு ஸ்நானம் செய்து தன் சக்திக்கு தக்கவாறு செய்யும் தானம்., ஜபம், ஹோமம் இவை அல்பமாயிருந்தாலும் அதிகம் ஆகட்டும். அந்நதியில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நானம் செய்து கைலாஸநாதரை ஸேவிப்பவருக்கு எல்லா பாபங்களும் நாசமடையட்டும். கைலாஸநாதர் என்னிடம் ப்ரஸன்னராக இருப்பாரேயானால் அங்கு வஸிப்பவர்களுக்கு யமபாதை ஏற்படக்கூடாது. ஐச்வர்யம் தொடர்ந்து வ்ருத்தியடையட்டும்.இவ்வாறு ப்ரம்ஹா ப்ரதிக்ஞை செய்துவிட்டு ஸ்வஸ்தானம் சென்றார். ஆகையால் இந்த க்ஷேத்ரம் மிகச்சிறந்தது.
  ப்ரம்ஹரிஷியே, நீர் செய்த ஸ்தோத்ரத்தால் நான் ஸந்தோஷமடைந்தேன்.  இந்த க்ஷேத்ரத்தில் புண்ய காலங்களில் தீர்த்தச்ராத்தம் செய்து க்ஷேத்ரபிண்டம் கொடுத்தால் அவனுடைய இரண்டு வர்கத்திலுள்ள பித்ருக்கள் த்ருப்தியடைகிறார்கள். ப்ரதி தினமும் மூன்று காலங்களிலும் இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பவர்களுக்கு நான்கு புருஷார்த்தங்களையும் நான் கொடுப்பேன். இதில் ஸ்ந்தேஹமில்லை. பஞ்சக்ரோச மத்தியில் செய்யும் ஜபம், தானம், ஹோமம், இவை என் அனுக்ரஹத்தால் அக்ஷயமாக இருக்கும். இந்த ரூபத்துடனேயே லிங்கமத்தியில் எப்பொழுதும் மனிதர்களுக்குக் காக்ஷியளிக்கிறேன். கலியுகம் வந்தபிறகு மறைந்து வஸிப்பேன். அப்படியே நீயும் எல்லோர் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்திருந்து ப்ரதிதினமும் முக்காலத்திலும் என்னை பூஜை செய்யும். இவ்வாறு சிவசைலபதி ப்ராம்ஹணரிடம் சொல்லிவிட்டு அழகிய சிவசைலத்தில் வலது பக்கத்தில் கல்யாணியுடனும் அந்தந்த ஸ்தானங்களில் நந்திகேச்வரர், விநாயகர், குஹர், மாத்ருகணங்கள், சண்டேச்வரர், ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன் முதலான தேவர்கள், அப்ஸரஸ், கந்தர்வர்கள், திக்பாலர்கள், ப்ருகு முதலான முனிவர்கள், நாரதாதி ரிஷிகள் இவர்கள் எல்லோருடனும் கூடியவராக நித்யவாஸம் செய்தார்.
முனிவரும் தன் தபோபலத்தால் விச்வகர்மாவைக் கூப்பிட்டு எல்லோருக்கும் ஆலயம் நிர்மாணம் செய்யும்படிச் சொன்னார். விச்வகர்மாவும், சிவனுகும் தேவிக்கும் தேவர்களுக்கும் ஆலயம் கட்டினான். முனிவர் ஐந்து காலங்களிலும் சிவசைலபதியை பூஜித்துக்கொண்டு தன் அபீஷ்டங்களைப் பெற்றுக் க்ருதக்ருத்யரானார்.

      ஐந்தாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம்- 4

நான்காவது அத்யாயம்
அத்ரி முனிவர்: - கங்கையை சிரஸ்ஸில் தரித்தவரும் விஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவரும் ஸ்கந்தரின் மனதிற்கு ஆனந்தம் தருபவரும்  போற்றத்தக்கவரும், தேவமுனி
ஸமூஹத்தால் ஸேவிக்கப்பட்டவரும் ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிக்கும் சிவனாகிய உமக்கு நமஸ்காரம்.
( சிவசைலத்திற்கு ஸ்ரீசைலம் என்ற பெயர் உண்டு. இதன் விபரம் அத்யாயம் 7, ஸ்லோகம் 27ல் காணலாம். இந்த ஸ்தோத்ரத்தில் ஒவ்வொரு ஸ்லோகமும் நம: சிவாய என்ற பஞ்சாக்ஷரத்தில் முடிவடைவதால் இது வேதத்திற்கு ஒப்பானது. இந்த சிவசைல நாதாஷ்டகத்தில் விராஸத்தைக் காணலாம். )
இந்திரனால் பூஜிக்கப்பட்ட பாதங்களுள்ளவரும், விருஷபத்தில் அமர்ந்திருப்பவரு, மழை முதலான தன்மைகளைச் செய்பவரும், தர்மஸ்வரூபரும், வளர்ச்சி (பிறப்பு,இருப்பு,வளர்ச்சி,மாறுதல்,குறைவு,நாசம் என்னும் ஆறு விகாரங்களற்று எப்பொழுதும் ஏகரூபமாயிருப்பவர்.)
முதலான தோஷங்களற்றவரும் சித்ஸ்வரூபியாக விளங்குபவரும் ஸ்ரீசைலபதியுமான சிவனாகிய உமக்கு நமஸ்காரம்.
கைலாஸ மலையில் லீலா ரூபமான காரியங்களைச் செய்வதில் பிரியமுள்ளவரும், மலையரசனின் குமாரியான பார்வதியுடன் கூடியவரும், வராஹ உருவமெடுத்த விஷ்ணுவால் நேரில் பார்க்கமுடியாமல் ஊகித்து அறியப்பட்டவரும் ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிக்கும் மங்களரூபியான உமக்கு நமஸ்காரம்.

எல்லாருக்கும் ஈச்வரனும், எல்லா ஆகமங்களாலும் போற்றப்பட்டவரும், பிரளய காலத்தில் எல்லோரையும் அழிப்பவரும், எல்லா பிராணிகளும் செய்யும் கர்மாக்களுக்கு
பலனையளிப்பவரும், எல்லா உருவமாக இருப்பவரும்,
எல்லாருடைய துன்பத்தையும் போக்குபவரும் ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிப்பவருமான மங்களரூபியான உமக்கு நமஸ்காரம்.
பக்தர்களிடம் ப்ரீதி கொண்டவரும் பக்தர்களின் பயத்தைப் போக்குபவரும் பர்கரும் மனதில் த்யானம் செய்பவர்களுக்கு ஸுகத்தைத் தருபவரும் ஒளியுள்ள கிரீடம் கடகம் இவைகளையணிந்தவரும் பிறவியைப் போக்குபவரும் ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவருமான மங்கள ரூபியான உமக்கு நமஸ்காரம்.
துக்கத்தை போக்குபவரும் (துஷ்டர்களை கதறச் செய்பவரும்) உருவமற்றவரும் ரமாபதியான விஷ்ணுவின் பிரீதிக்கு இருப்பிடமானவரும் ராமரால் பூஜிக்கப்பட்டவரும், ராகம் முதலிய தோஷங்களற்றவரும் மேலானவற்றிற்கும் மேலானவரும் ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவருமான சிவனாகிய உமக்கு நமஸ்காரம்.
காமனைகளை நிறைவேற்றும் ஈசனும் கலியின் தோஷங்களை போக்குபவரும் காலஸ்வரூபியும் காலத்தால் மாறுதலடையாதவரும் மேருமலையை வில்லாக கொண்டவரும் ஸ்ரீசைலமலையின் அடியில் வஸிப்பவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
உமையுடன் கூடியவரும் சந்திரன், ஸூரியன்,அக்னி இவர்களை கண்களாகக் கொண்டவரும் பிராமண சிரேஷ்டர்களால் ஸோம யாகத்தால் பூஜிக்கப்பட்டவரும் ஸோமனுக்கு ஈசுவரரும் தேவர்களால் வணங்கத்தக்க திருப்பாதங்கள் உள்ளவரும் ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவரும் சிவனுமாகிய உமக்கு நமஸ்காரம்.
ஹே தேவ மஹாதேவ, எப்பொழுதும் இருப்பவரே, மங்களத்தருகின்றவரே, எல்லா தேவர்களுக்கும் தலைவரே, எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவரே,அழிவற்றவரே, உருவமற்றவரே, உலகங்களை தாங்குகிறவரே, குறைவில்லாதவரே, உலகத்தாரால் வணங்கத்தக்க ஈசனே, சிரேஷ்டமான ஸர்ப்பங்களை ஆபரணமாகக் கொண்டவரே, கெளரீபதியே, சம்போ, அர்த்தசந்திரனை சிரஸில் அணிந்தவரே, கோடி ஸூரிய ப்ரகாசமுள்ளவரே, அழிவற்றவரே, தோஷமற்றவரே, தலைவரே, கருணைக்கடலே, பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவரே, தாண்டமுடியாத ஸம்ஸாரக் கடலிலிருந்து கரை ஏற்றுபவரே, பிரபோ, தாங்கள் மேன்மையுடன் விளங்க வேண்டும்.
தேவர்களின் ஈசனே, ஸம்ஸாரத்தால் பீடிக்கப்பட்டு வருந்துகிற எனக்கு அருள் புரிய வேணும். பரமேச்வரா! எப்பொழுதும் இங்கு ஸாந்நித்யம் கொண்டு என்னைக் காப்பாற்ற வேணும்.

இவ்வாறு துதிக்கப்பட்ட சந்திரனை சிரஸ்ஸில் அணிந்த, க்ஷேமத்தைச் செய்கிற மஹாதேவர்,
ஹே த்விஜர்களே, அம்முனிவரை ஸந்தோஷப்படுத்திக் கொண்டு கம்பீரமான வாக்கால் சொன்னார்.
பிரம்ம ரிஷியே! உன்னிடம் ஸந்தோஷமடைந்துள்ளேன். உண்மையான யோகிகளல்லாதவர்கள் என்னை ஸந்தோஷப்படுத்த முடியாது. வரம் கேள், உனக்கு நன்மை உண்டாகட்டும். உன் மனதில் விரும்பியதைக் கேள். எல்லாவற்றையும் தருகிறேன்.

ஸூதர் கூறுகிறார் :- இவ்வாறு பரமேஷ்டியான சம்புவால் கூறப்பட்ட த்விஜ சிரேஷ்டரான அத்ரி முனிவர் ஸர்வபூதங்களுக்கும் ஈசுவரனான சிவனை வணங்கி அஞ்ஜலி பந்தம் செய்து கொண்டு சொன்னார்.

பகவானே, ஸர்வபூதேசனே, பக்தர்களின் அபீஷ்டங்களைக் கொடுப்பவனே, சம்போ இப்பொழுது நான் உங்களை தரிசித்த ரூபத்துடன் இங்கே எப்பொழுதும் தாங்கள் ஸாந்நித்யம் செய்ய வேண்டும். இங்கு வஸிக்கும் ஜனங்களுக்கு போகத்தையும் மோக்ஷத்தையும் அருள வேண்டும். இங்கே செய்யும் ஜபம், ஹோமம், தானம் இவை குறைவற்றதாக இருக்க வேணும்.
தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே, த்ரிகூடம் என்ற மலை இன்றுமுதல் உலகில் சிவசைலம் என்று ப்ரஸித்தியடையட்டும் எனக்கும் என் சிஷ்யனுக்கும் எப்பொழுதும் உம்மிடம் வேறு விஷயத்தில் மனம் செல்லாத பக்தி இருக்கட்டும். இது தான் என்னுடைய உயர்ந்த வரம்.
பிராமண சிரேஷ்டர்களே, இவ்வாறு முனிவரால் வேண்டப்பட்ட மகாசம்பு புத்திமானாக பிரம்ம குமாரரான அந்த அத்ரிமுனிவருக்கு கேட்டது எல்லாவற்றையும் கொடுத்தார். ஸந்தோஷத்தால் தழதழத்த குரலில் முனிவரைப் பார்த்துச் சொன்னார்.
பிரஹ்மரிஷியே, உம்மால் செய்யப்பட்ட இந்த ஸ்துதியால் உம்மிடம் ஸந்தோஷம் கொண்டிருக்கிறேன். மிகவும் ரஹஸ்யமான ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். கேளும்.
கடனை என்ற பெயருள்ள கங்கையினுடைய அழகியதும் சிறப்புவாந்ததுமான தென்கரையில் மூன்று இடங்களில் எப்பொழுதும் லிங்கத்தில் சிறப்பாக வஸிக்கிறேன்.

     நான்காவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 3

மூன்றாவது அத்யாயம்
இவ்வாறு தனது ஆச்ரமத்தில் வஸித்துவரும் பரிசுத்தமனமுள்ள அத்ரி மஹரிஷிக்கு மனதில் ஸந்தோஷமின்மையும் வெறுப்பும் ஏற்பட்டது. என்ன ஆச்சர்யம்?. எனது துஷ்டத்தனத்தைப் பார்! எப்பொழுதும் ஸந்தோஷத்துடன் இந்த ஆச்ரமத்தில் வஸித்துவரும் எனக்கு ஸ்வயம்பு லிங்கத்தில் விளங்கும் சிவனுடைய தர்சனமில்லாமலேயே அநேக வருஷங்கள் வீணாகக் கழிந்துவிட்டனவே. க்ஷேமத்தைக் கொடுக்கும் சிவன் எங்குமிருந்த
போதிலும்விஷயங்களில் மனம் ஈடுபட்டவர்களுக்கு அநுக்ரஹம் செய்வதற்காக க்ருபையால் ஸ்வயம்பு லிங்கத்தில் ஸாந்நித்யம் செய்துள்ளார். பசுவின் உடல் முழுவதும் பால் இருந்தபோதிலும் அதன் மடுவில் தான் நம்மால் காணப்படுகிறது. இதுபோல் எங்குமுள்ள சிவன் ஸ்வயம்பு லிங்கத்தில் ஸாந்நித்யம் செய்கிறார். அகஸ்தியர் மிகுந்த பாக்யசாலி. அவர் மூன்று காலங்களிலும் பாபநாசேச லிங்கத்தில் விளங்கும் மங்களரூபியான சாம்பனை ஸேவிக்கிறார்.
இவ்விதம் முனிவர் எண்ணி ஈசனை தியானம் செய்யும் பொழுது ” மஹரிஷியே! அநாதி சிவசைலேசர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக முன்னாலேயே நான் இங்கே வாஸம் செய்து வருகிறேன். என்னைப்பார்! “ என்று ஆகாசவாணி கேட்டது. இது என்ன?. இந்த வார்த்தை யாரால் சொல்லப்பட்டது?. என்று மனதில் ஆவலுடன் யோஜித்து “ ஸர்வேசுவரனுடைய வார்த்தை தான் “ என்று தீர்மானித்து ஆகாசவாணி கேட்ட திசைக்கு நமஸ்காரம் செய்து ஆனந்தமடைந்தார்.
இந்த ஸமயத்தில் அத்ரி சிஷ்யனான கோரக்ஷகன் ஸமித்,புஷ்பம், தர்ப்பம்,பழம் இவைகளைக் கொண்டுவர ஆசையுடன் ஆச்ரமத்திற்கு முன்னால் கடநா நதியின் தென்கரையில் மாமுதலான பழம் புஷ்பம் தரும் மரங்களும் கொடிகளும் நாணல் தர்ப்பைகளும் நிறைந்த மார்க்கமாகப் போகும்பொழுது மரங்கள் அடர்ந்த இடத்தில் மறைந்திருக்கும் அழகான அமைப்புடன் விளங்கும் அநாதி சிவசைலேச லிங்கத்தைக் கண்டு ஸந்தோஷமடைந்து ஆச்ரமம் வந்து குருவான அத்ரி முனிவரிடம் தெரிவித்தான்.
சிஷ்யனின் வார்த்தையைக்கேட்ட அத்ரி முனிவர் மிகுந்த வேகத்துடன் அங்கு சென்று மஹாலிங்கத்தைப் பார்த்து  மிகுந்த ஸந்தோஷமடைந்து ப்ரீதி என்னும் அமிருதக் கடலில் மூழ்கி சுயநினைவின்றி பரவசமாகி விட்டார். வெகுநேரத்திற்குப் பிறகு நினைவு வந்து லிங்கத்தைப் பார்த்தார். அப்பொழுது லிங்கமத்தியிலிருந்து சம்புவானவர் மான்,உளி,வரம்,அபயம் இவற்றுடன் விளங்கும் நான்கு கைகளுடனும் அருகில் பார்வதி யுடனும் வ்ருஷபத்தின் மீது அமர்ந்தவராகத் தோன்றினார்.
ஸம்ஸார நோயை அகற்றும் மருந்து போன்றவரும், கோடி சந்திரர்களுக்கு ஒப்பான ஒளியுள்ளவரும் மூன்று கண்களுள்ளவரும், சந்திரனை சிரஸில் தரித்தவரும், பிங்கள வர்ணமான ஜடாபாரமுள்ளவரும் சிரஸில் ரத்னகிரீடம் அணிந்தவரும் (விஷத்தால்) கருப்பான கழுத்துள்ளவரும் புலித்தோலையணிந்தவரும், அழகைய சரீரமுள்ளவரும், அம்பிகையுடன் கூடியவரும், தேவர்களுக்கு ஈசனுமான சிவனை தர்சித்து சிறந்த தர்மத்தையறிந்த அத்ரி முனிவர் அதிக ஸந்தோஷத்தால் இந்திரியங்கள் கலக்கமடைய தண்டம் போல் பூமியில் விழுந்து வணங்கி திரும்பித் திரும்பி தர்சித்தார். திரும்பத் திரும்ப வணங்கினார். பிறகு சரீரம் புல்லரிக்க மிகுந்த பக்தியுடன் பரமேசனை துதிக்க ஆரம்பித்தார்.
     மூன்றாவது அத்யாயம் முற்றும். 

சிவசைலம் -2

      இரண்டாவது அத்யாயம்
செளனகாதி ரிஷிகள் கேட்கிறார்கள்: - ஸூத முனிவரே! தாமரை போன்ற தங்கள் திருமுகத்திலிருந்து வெளிவருகிற புனிதமான சிவகதைகளைக் கேட்டு திருப்தி ஏற்படவில்லை. ஸாம்ப பரமேச்வரனாகிய சிவசைலநாதரின் மஹாத்ம்யம் கேட்கக்கேட்க புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. சிவசைலம் என்ற பெயர் எப்படி வந்தது?. ஸர்வக்ஞராயும் முனிச்ரேஷ்டராயும் குலபதியாகவும் விருத்தராயும் தபோதனராயும் உள்ள அத்ரி முனிவரின் மஹிமை என்ன?. அவர் எவ்விதமான தவம் செய்தார்?. அவர் சிஷ்யர் எவ்விதமானவர்?. எவ்வித தவத்தால் ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கும் பரம்சிவன் ஸந்தோஷமடைந்து அவர்முன் தோன்றினார்?. சிவஞானத்தைக் கொடுக்கக்கூடிய இவை எல்லாவற்றையும் தயவு செய்து கூற வேண்டும்.
இதைக்கேட்டு ஸூத முனிவர் கூறுகிறார்:-
த்ரிகூடம் என்ற பர்வதம் பிரஸித்தமானது. ஆகாயத்தைத் தொடும்படியான விசாலமான அநேக சிருங்கங்களுடன் கூடியது. பலவித மரங்களோடும் அருவிகளோடும் யானைகளோடும் பலவித பக்ஷிகளோடும் வீணை வாசிப்பதில் தேர்ச்சியுள்ள கின்னரர், கிம்புருஷர்கள் நாட்யமாடும் அப்ஸர ஸ்த்ரீகள், வித்யாதரர் முதலான தேவகணங்கள் கையில் ஜபமாலையுடன் ஜபம் செய்து கொண்டும், “ நான் சித்ஸ்வரூபம் “ என்று த்யானம் செய்து கொண்டுமிருக்கும் யதிகள், யோகிகள், முனிவர்கள் இவர்களுடன் கூடியது. இங்கு தான் கஜேந்திரனின் காலை முதலை பிடித்த பொழுது விஷ்ண்னு சக்ரபாணியாக வந்து காப்பாற்றினார்.
புண்யசாலிகள் வாழும் இந்த பர்வதத்தில் அத்ரி மஹரிஷி அநஸூயையுடனும் சிஷ்யருடனுடன் கூடி கிருஹஸ்த தர்மங்களைச் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் அவருடைய சிஷ்யன் கோ ரக்ஷகன் கங்கா ஸ்நானம் செய்ய யாத்திரை செல்ல வேண்டுமென்று ப்ரார்த்திக்க அத்ரி முனிவர் அவனுக்கு ஞானம் ஏற்படுவதற்காக ஓர் உபாயத்தை ஆலோசித்தார். பிறகு தன் சிஷ்யனின் கோரிக்கை நிறைவேறுவதற்காகவும் அங்கு வாழும் ஜனங்களின் க்ஷேமத்திற்காகவும் தன் கையில் இருக்கும் தண்டத்தால் பூமியில் தட்டவே அங்கிருந்து தீர்த்தம் கிளம்பியது.
அதற்கு அத்ரி தீர்த்தம் என்று தன் பெயரைக் கொடுத்து கங்கையை அழைத்தார். உடனே அங்கு வந்த கங்கையை தான் நிர்மாணித்த ஜலத்துடன் சேர்த்து விட்டார். இதனால் (கடனாத்)
அந்த தீர்த்ததிற்கு ‘ கடநா ‘ என்ற பெயர் ஏற்பட்டது. தைமாதம் புஷ்ய நக்ஷத்ரத்தன்று அங்கு கங்கை வந்து சேர்ந்த படியால் அங்கு தைப்பூசத்தன்று ஸ்நானம் செய்வது சிலாக்யமாகச் சொல்கிறார்கள்.
வெகுகாலத்திற்குப்பின் கங்கையானவள் “ நான் ஸமுத்ரம் செல்ல ஆசைப்படுகிறேன். அனுமதி தர வேண்டும் “ என்று பிரார்த்தித்தாள். முனிவரும் எப்பொழுதும் ’ கடனை ’ என்ற பெயரை தாங்கிக் கொண்டு ஸமுத்ரம் செல்வாயாக! என்று அனுமதி அளித்தார். உடனே கங்கை ’ கடனா ‘ என்ற  பெயருடன் கிழக்கு திசை நோக்கிச் சென்றாள். வழியில் இரு கரைகளிலும் உள்ள பாக்கு, தென்னை, பலா, மருது, மா, நெட்டலிங்கம்,கூந்தல் பனை, பில்வம், அத்தி, எலுமிச்சை முதலான விருக்ஷங்கள் அவளுக்கு ஆபரணங்களாக அமைந்தன. இரு கரைகளிலும் பாபமற்ற முனிவர்களால் சிவாலங்களும் விஷ்ணு ஆலயங்களும் அமைக்கப்பட்டன. தாயார் குழந்தைகளைப் போல தனது தீர்த்தத்தால் எல்லாப் ப்ரஜைகளையும் ரக்ஷித்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் அந்தப் பூமியைப் பரிசுத்தம் செய்து கொண்டும் கங்கை ”கடனை” என்ற பெயருடன் கிழக்கு திசையில் ஸமுத்ரத்தை அடைந்தாள்.
” கடநா “ என்ற பெயருடன் தன் பர்த்தாவான ஸமுத்திரத்தை நோக்கிச் செல்கிற கங்கை என்ற பெண்ணுக்கு அந்த நதியில் மலர்ந்த தாமரை முகமாகவும் கருநெய்தல் மலர்கள் கண்களாகவும் சக்ரவாக பக்ஷிகள் ஸ்தநங்களாகவும்  ராஜஹம்ஸங்களின் வரிசையாகிற தோழிகளுடன் சூழப்பட்டவளாய் விளங்கினாள். ஸாரஸ பக்ஷிகளின் நாதம் ஒட்டியாண ஒலியாகவும் செந்தாமரை பாதமாகவும் இருகரைகளிலுமுள்ள மரங்கள் குண்டலங்களாகவும், சுற்றி வரும் வண்டுகள் கேசங்களாகவும் வெண்மையான நாணல் மேலாடையாகவும் விளங்கியது.
வஹ்நீச்வரர், ராமேச்வரர், ஸுந்தரேசர், இவர்களின் ஆலயங்களுக்கு தெற்கே, வாலிநாதருக்கும் ரோமச முனிவரால் பூஜிக்கப்பட்ட பிரஹ்மவிருத்தபுரம் என்னும் பிரம்மதேசத்திற்கும் அங்குள்ள கைலாஸேச்வரருக்கும் ச்வேதேச்வர லிங்கத்திற்கும் வடக்கே கிழக்கு திசை நோக்கிச் சென்று புடார்ஜுநேச்வரலிங்கத்திற்கு மேற்கே தெற்கு நோக்கி பிரவஹித்தாள். அங்கு மிக கர்வத்துடன் ஓடிவரும் கடநா நதியைப் பார்த்து புடார்ஜுநேச்வரர், அவள் அஹங்காரத்தையடக்குவதற்காக ஹுங்காரம் செய்தார். அதனால் கடனை என்ற கங்கை வெகுகாலம் அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தாள். பிறகு ’தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஈசனே! ஜகந்நாதா,அர்ஜுநேச்வரா, பார்வதிநாத, பக்தர்களின் இஷ்டங்களைத் தருபவரே உனக்கு நமஸ்காரம். என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று துதித்து வெகுகாலம் தவம் செய்தாள்.
ஸ்தோத்ரத்தாலும் தவத்தாலும் சந்தோஷமடைந்த புடார்ஜுநேச்வரர் அவள் முன் தோன்றி “ அகஸ்தியர் இங்கு வந்த பின் தாம்ரபர்ணீ என்று ப்ரஸித்தமான நதி வரப்போகிறாள். அப்பொழுது அவளுடன் சேர்ந்து நீயும் செல்லலாம். “ என்று கூறிவிட்டு ஸ்வயம்பூலிங்கத்தில் மறைந்தார். ( இதனால் தாம்ரபர்ணீ நதி வரும் வரை கடநா நதி ப்ரவாஹம் புடார்ஜுனத்திற்கு அப்பால் செல்லாமல் அங்கேயே பூமிக்குள் சென்று மறைந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.)
தர்ம தத்வமறிந்த அத்ரி மாமுனிவர் சிவனிடம் தன் மனதைச் செலுத்தி சிஷ்யருடன் முக்காலங்களிலும் சைலேச லிங்கத்தைப் பூஜித்து வந்தார். மஹாபுத்திமானான சிஷ்யன் கோரக்ஷகன் சிவத்யானத்துடன் குரு சுச்ரூஷையில் ஈடுபட்டு திவ்ய ஞானமடைந்தான். இவ்விதமிருந்து வரும் பொழுது மஹாபுத்திமானான மஹரிஷி அத்ரி முனிவருக்கு அகஸ்த்ய முனிவரை தரிசிக்க வேணும் எண்ணம் ஏற்பட்டது. உடனே சிஷ்யனுடன் மலய பர்வதம் சென்று பாபவிநாசேசர் ஸந்நிதியில் தியானத்தில் அமர்ந்திருந்த அகஸ்த்ய முனிவரை தர்சித்து மிக ஸந்தோஷமடைந்து பாபவிநாசேச்வரரை வணங்கி மிகுந்த பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
“ மங்களரூபியும் அம்பிகையுடன் கூடியவருமான பாபநாசேச்வரருக்கு நமஸ்காரம். ஞானஸ்வரூபியும் எல்லாப் பிராணிகளுக்கும் ஸாக்ஷியான உமக்கு நமஸ்காரம். மூவுலக நாதரும் மூவுலகஸ்வரூபரும் சைதன்ய ஸ்வரூபரும் விகாரமற்றவருமான உமக்கு நமஸ்காரம்.”
இவ்வாறு துதித்து பக்தியால் பரவசமடைந்தார். அத்ரி முனிவரைக் கண்டு அகஸ்த்யர் திடீரென்று எழுந்து பாத்யம், அர்க்யம், ஆஸனம், வந்தனம் முதலான உபசாரங்களால் பூஜித்தார். இரு முனிவர்களும் மிக்க ஸந்தோஷமடைந்தவர்களாக பாபவிநாசேசரின் ஸந்நிதியில் பாபத்தைப் போக்கும் ஆச்சர்யமான சிவகதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு அத்ரி முனிவர் தனது ஆச்ரமத்திற்குப்போக எண்ணம் கொண்டவராய் அகஸ்த்யரிடம் விடைபெற்றுக் கொண்டு பாபநாசேச்வரரை வணங்கி த்ரிகூடாசலம் வந்து தந்து ஆச்ரமத்தில் ஸுகமாக வஸித்து வந்தார்.

       இரண்டாவது அத்யாயம் முற்றிற்று.           

Sunday, January 25, 2015

சிவசைலம் -1

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருளால் சிவசைலம் மாஹாத்மியம் கொஞ்சம் எழுத முயற்சி. முழுமை அடைய கணபதியைப் பணிகின்றேன்.
சிவசைலபதியையும் பரமகல்யாணி நாயகியையும் அழகிய ஸ்நேகபுரத்தையும் கடநா நதியையும் வணங்குகிறேன்.
அத்ரி மஹரிஷியால் பூஜை செய்யப்பட்டவ்ரும் மங்களத்தைச் செய்பவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நன்றாய் பூர்த்தி செய்கின்றவரும் பதினாறு ஆவடையாளுடன் கூடியவருமான சிவசைலபதியை நமஸ்கரிக்கின்றேன்.
நான்கு கைகளுடன் கூடியவளும் விசாலமான நேத்ரங்களுடன் கூடியவளும் செம்பரத்தை புஷ்பத்திற்கு சமமான சோபையுடையவளும் ஆகிய பரமகல்யாணியை சப்தார்த்தங்கள் நன்கு விளங்குவதன் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன்.
 கற்பூரம் போல் நிர்மலமான சரீரத்துடன் கூடியவளும் எதை நினைக்கிறார்களோ அதைக் கொடுக்கிறவளும் சங்கு போல் அழகிய கழுத்துடன் கூடியவளும் பூஜ்யையாயும் இருக்கின்ற அந்த ஸரஸ்வதியானவள்  என்னுடைய வாக்கிலிருந்து கொண்டு எனக்கு அனுக்ரஹத்தைச் செய்யட்டும். என்னுடைய கைகளிலிருந்து கொண்டும் அனுக்ரஹம் செய்யட்டும்.
சிரஸில் சந்திரனை தரித்திருப்பதாலுண்டான சோபையுடன் கூடிய ஜடாமண்டலத்தையுடையவரும் க்ருசமான உதரத்துடன் வேடுவ உருக்கொண்டவளுமான பார்வதியை சகாயமாகவுடையவரும் எப்பவும்
மங்களத்தைக் கொடுக்கின்றவரும் தன்னை உபாஸனை செய்கின்றவர்களுக்கு எப்பவும் பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமாகிய சிவசைலபதியை ஸேவிக்கிறேன். இவ்விடத்தில் வசிக்கும் மஹான்கள் எவருடைய  சரணகமலங்களை பூஜித்துஇங்கே சகல பாக்யங்களையும் அனுபவித்து முடிவில் மோக்ஷபதவியை அடைகின்றார்களோ அந்த சந்த்ர சூடனாகிய சிவசைலபதியை நமஸ்கரிக்கின்றேன்.

அண்டின ஜனங்களின் கஷ்டங்களை விவரிக்கின்றவளே சந்த்ரனை சிரோபூஷணமாகவுடையவளே மங்களத்தைச் செய்கின்றவளே, சிவசைலபதியின் பத்னியே, நெய்தல் புஷ்பத்திற்கு சமமான காந்தியுடையவளே. மனோஞ்ஞமானவளே,உன்னுடைய கருணைப்பார்வையை என்னிடம் இடைவிடாது செலுத்தவேண்டும். வணங்கின ஜனங்களின் பாபங்களாகிற ஹம்ஸங்களுக்கு புதிய நீருண்டமேகம் போலழகிய சரீர காந்தியுடன் கூடியவளும் குயிலுக்கு சமமான ம்ருதுவசனமுடையவளுமாகிய பரமகல்யாணியை நான் தினந்தோறும் வணங்குகிறேன்.

மங்களமாயும் வ்யாஸமஹர்ஷியின் முகமாகிய தாமரையில் நின்றும் பெருகினதாயும் சிவசைலனாதருடைய மஹிமையென்ற மதுவை இருகாதுகளின் வழியாக பக்தியுடனும் ஆதரவோடும் நித்யமாக எவன் பானஞ்செய்கின்றானோ அந்த புருஷன் பிறப்பு இறப்பு வ்யாதி முதலிய கஷ்டங்களுக்கிருப்பிடமான இந்த ஸம்ஸார பந்தத்தில் நின்றும் விடுபட்டு அழிவில்லாத சிவபதத்தை அடைகின்றான்.

             || சிவசைலமாஹாத்ம்யம் ||
             || முதலாவது அத்யாயம் ||
ஸகல லோகங்களிலும் ப்ரஸித்தமான நைமிசாரண்யம் என்பது மஹா தபஸ்விகல்ளும் வெகுநாள் யாகம் செய்யும் ரிஷிகளும் வாஸம் செய்யும் புண்யமான ஸ்தல விசேஷம் ஒருஸமயத்தில் அங்கு புராணங்களை நன்றாக அறிந்த ஸூதமுனிவரைக் குறித்து சௌனகாதி மஹர்ஷிகள் மிகவும் பணிவுடன் கேட்கிறார்கள்.

ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுணர்ந்த ஸூத மஹர்ஷியெ ! முன் சிவக்ஷேத்ரங்களுடைய வைபவங்களை மிகவும் சிறப்பாக சொன்னீர்கள். அதில் சிவசைலம் என்ற சிவக்ஷேத்ரத்தைப்பற்றி சுருக்கமாகச்சொன்னீர்கள் . இப்பொழுது அதை விஸ்தாரமாகக் கேட்க ஆவலுடன் இருக்கின்றோம்.

அத்ரிமஹர்ஷி வாஸம் செய்த புனிதமான சிவசைலத்தில் சிவன் லிங்க உருவில் ஆவிர்பவித்தாரல்லவா ! மிகவும் அழகு பெற்ற கைலாசபர்வதத்தை விட்டுவிட்டு பரமேச்வரன் இங்கு ஏன் ஆவிர்பாவம் ஆனார் ? சிவசைலம் என்ற க்யாதி எவ்விதம் ஏற்பட்டது ? த்ரிகூடசைலம் என்று தானே முனிவர்கள் சொல்லிவந்தார்கள் ! சிவசைலத்தின் கிழக்கும் பக்கத்தில் மேற்குமுகமாக பரமகல்யாணீ நாயகராக விளங்குகிறார் . மலய பர்வததிற்கு வடக்குத் திசையில் கடநா நதிக்கு தென்கரையில் ஸாக்ஷாத் பரமேச்வரர் தன்னுடைய கணங்களுடன் பக்தர்களுக்கு அருள் புரிவதாகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டது, அதையும் விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும் என்றும் ப்ரச்னம் செய்தார்கள்.

இவ்விதம் மஹரிஷிகளால் செய்யப்பட்டு மிகவும் ஸந்தோஷமடைந்து ரிஷிகளுடைய வார்தைகளை மனதால் ச்லாகித்துக்கொண்டு ஸூதமுனிவர் ப்ரம்ஹா , விஷ்ணு , ருத்ரர் , விநாயகர் , ஸுப்ரம்ஹண்யர் , ஸரஸ்வதீ , சிஷ்யர்களுடைய ஆனந்தமாகிற தாமரை மலருக்கு ஸூர்யன் போல் விளங்குகின்ற குரு வ்யாஸர் , இவர்களை நன்றாக வணங்கினார் கல்யாணீ நாயகரும் கலியின் மலத்தைப் போக்குகிறவரும் மன்மதன் , காலன் ,(யமன்) அந்தகன் இவர்களை அடக்கியவரும் காமம் க்ரோதம் முதலிய சத்ருகணங்களை ஜயித்த யோகிகளுடைய மனதாகிற உப்பரிகையில் வஸிப்பவரும் கல்யாணாத்ரி என்கிற மஹாமேரு பர்வதத்தை வில்லாகச் செய்தவரும் ப்ரம்ஹா முதலிய தேவர்களால் வணங்கப்பட்டவரும் மங்களத்தைச் செய்பவருமான ஸ்ரீசைலபதியை தத்வார்தங்கள் ஸித்திக்கும் பொருட்டு வணங்குகிறேன்.

(இங்கு ஸூதமுனிவர் புராணத்தின் யதார்த்தமான பொருள் நன்கு விளங்குவதர்காக த்யானம் செய்தார். தத்வார்த்தஸித்தியை , என்பதை “ புத்ரார்த்த ஸ்த்யை கார்யார்த்த ஸித்யை ” என்று பிரார்தனைக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ளலாம்.) இவ்வாறு ஸ்ரீ பரமகல்யாணீ சமேதரான சிவசைலேசரை மிகவும் ஸ்ந்தோஷத்துடன் வணங்கிவிட்டு சிவக்ஷேத்ரங்களில் உத்தமமான ஸ்ரீ சிவசைலத்தின் மஹிமையை கூறத் தொடங்கினார்.

ஸூதமுனிவர் :---  மஹர்ஷிகளே ! உங்களால் கேட்கப்பட்ட சிவசைல மாஹாத்ம்யம் மிகவும் லோகத்திற்கு மங்களகரமானது. கல்யாணீசகதை புண்யத்தைத் தரும் எப்பொழுதும் மங்களகரமானது . ஸம்ஸாரமாகிர கடலைக் கடக்கிறவர்க்கு ஸாதகமானது ஸகலாபீஷ்டங்களையும் கொடுக்கக்கூடியது.

மேலும் 1. கல்யாணீநாயக: 2.சம்பு : 3.சிவசைலேச: இந்த நாமத்ரய மந்த்ரம் த்ரிவர்க பலனைத் தரும் . மூன்று லோகங்களை வசீகரணம் செய்யக்கூடியது. ஷெ மந்த்ரத்தை ஓங்காரபூர்வமாக உச்சரித்தால் சதுர்வர்க பலனைத்தரும் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பது நாலு வர்கம்,
1.ஓம் கல்யாணீநாயக: 2. ஓம் சம்பு : 3. ஓம் சிவசைலேச: என்பதாகத் தெரிகிறது.) 1. சம்பு: 2.பரமகல்யாணீ நாயக: 3. அத்ரிஸுபூஜித: இந்த நாமத்ரயத்தை ஜபித்தால் நிச்சயமாக முக்தி ஏற்படும். 1. சிவ: 2. பரமகல்யாணீ நாயக: 3.அந்தகமர்தன: 4.கங்காதர; 5.விரூபாக்ஷ: 6.கபர்தீ 7.சசிபூஷண: 8.பஸ்சிமத்வாரநிலய: 9.கடநாதீரபூஷண; 10.அத்ரிபூஜித பாதாப்ஜயுகள:,11,நீலலோஹித:,12.கோரக்ஷலக்ஷித:. இது த்வாதச நாமங்கள் அடங்கிய மந்திரம். இந்த 12 நாமங்களையும் தினம் மூன்று காலங்களிலும் உச்சாரணம் செய்தால் ஜீவன் முக்தனாகிறான்.
இந்த சிவசைல க்ஷேத்ரம் எல்லா சிவ க்ஷேத்ரங்களைக்
காட்டிலும் முக்யமானது. மேற்கு முகமாக வாசல் உடையது.
( எல்லா ஆலயங்களுக்கும் அநேகமாக கிழக்கு பக்கம் வாசல் இருக்கும். இங்கே மேற்கே வாசல். இதனால் இதற்கு விசேஷம் அதிகம் என்று தாத்பர்யம். )
கடநா நதிக்கரைக்கு அலங்காரமாக இருக்கக் கூடியது. அழிவற்றது. நதிகளில் கங்கை போலவும் தேவர்களுக்குள் விஷ்ணு போலவும் க்ருஹஸ்தர்களுக்குள் வஸிஷ்டர் போலவும் ஸ்த்ரீகளுக்குள் அருந்ததி போலவும் மந்திரங்களுக்குள் ப்ரணவம் ( ஓங்காரம் ) போலவும் தானங்களுக்குள் அபயதானம் போலவும் பக்ஷிகளுக்குள் கருடன் போலவும் லோஹங்களுக்குள் தங்கம் போலவும் விருக்ஷங்களுக்குள் அஸ்வத்த (அரச)விருக்ஷம் போலவும் மிருகங்களுக்குள் பசு போலவும் ஈஸ்வரர்களுக்குள் சிவன் போலவும் இந்த க்ஷேத்ரம் சிவ க்ஷேத்ரங்களுக்குள் முக்யமானது.
இந்த க்ஷேத்ரத்தில் ஒருநாள் வாஸம் செய்தால் அதிபாதகத்திலிருந்து விடுதலையடைகிறான். நிரம்ப சொல்லி என்ன ப்ரயோஜனம்?. இந்த க்ஷேத்ரத்திற்கு ஸமமான க்ஷேத்ரம் கிடையாது. கடநா நதியில் யாதொரு மனிதன் சதுர்த்தசி, அஷ்டமி, பூர்ணிமை, அமாவாஸ்யை, ஆடிமாதப்பிறப்பு, தை மாதப்பிறப்பு, சந்திரகிரஹணம், ஸூர்யகிரஹணம், சித்திரை மாதப்பிறப்பு, ஐப்பசிமாதப்பிறப்பு, விஷ்ணுபதி என்றி சொல்லக் கூடிய வைகாசி, ஆவணி,கார்த்திகை, மாசி மாதப் பிறப்புகள், ஷடசீதி என்று சொல்லக் கூடிய ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதப் பிறப்புகள் இந்த புண்ய தினங்களில் விதிப்படி ( ஸங்கல்பம், வருணஸூக்த படனம், மார்ஜனம், அகமர்ஷணம்,தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் என்ற பஞ்சாங்க முறைப்படி ) ஸ்நானம் செய்து தில அக்ஷதைகளால் தேவரிஷிபித்ரு தர்ப்பணம் செய்து,
மேற்கு முகமாக ஸ்வயம் ஆவிர்பவித்த, அழகிய 16 ஆவடையாளுடன் கூடிய சிவசைலேச லிங்கத்தையும்,
ஸகலலோக மாதாவும் பாசம், அங்குசம், அபயம்,வரதானம், இவைகளுடன் விளங்கும் நான்கு கைகளுள்ளவளும், அகன்ற கண்களுள்ளவளும் மேற்கு திசை நோக்கியவளும் எல்லா லக்ஷணங்களும் பொருந்தி, எல்லா அங்கங்களிலும் மிக்க அழகுடன் விளங்குபவளுமான பரமகல்யாணி அம்பாளையும் தரிசித்து ஒருமுறை வணங்கியவன் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு தேவபாவத்தை அடைகிறான்.
தினமும் மூன்று தடவை பரமகல்யாணி அம்பாளை ஸேவிப்பவன் எல்லா அபீஷ்டங்களையும் பெறுகிறான். ப்ரஹ்மா விஷ்ணு முதலியவர்களால் இங்கு பூஜிக்கப்பட்ட
ஸ்ரீசாம்ப மூர்த்தியின் ஸாந்நித்யமுள்ள சிவசைலக்ஷேத்ரத்திற்கு ஸமமான க்ஷேத்ரம் இல்லவே இல்லை. இது முக்காலும் உண்மை. அத்ரி முனிவருக்கு அநுக்ரஹம் செய்வதற்காக ஈச்வரர் இங்கு எப்பொழும் ஸாந்நித்யத்துடன் இருக்கிறார்.
1.சிவசைலேச்வரர்,2.ராமேச்வரர்,3.வஹ்நீச்வரர்,4.பாபநாசேச்வரர். இந்த நான்கு மூர்த்திகளுக்கும் மத்தியில் உள்ள பிரதேசம் பஞ்சக்ரோசம் எனப்படும். ( காசியில் கங்கைகரையில் பஞ்சக்ரோசம் உள்ளது. அங்கு செல்பவர்கள் பஞ்சக்ரோச யாத்ரை செய்கிறார்கள் ) அது போல தக்ஷிணகங்கையிலும் பஞ்சக்ரோசமுள்ளது.
இங்கு வஸிக்கும் மனிதன் பஞ்சக்ரோச மத்தியில் எங்கு மரணமடைந்தாலும் ருத்ரானுக்ரஹத்தால் சிவஸாரூப்யத்தை அடைவான். ( காச்யாம் து மரணான் முக்தி என்றபடி ). இதுவும் காசிக்கு ஸமானம் என்று அறியவும். இங்கு செய்யும் தானம், ஹோமம், ஜபம், தவம் இவை அழிவற்ற பலனைக் கொடுக்கும். பொய் பேசுபவன், துஷ்டன், நாஸ்திகன், நன்றிமறந்தவன், குருத்ரோஹி, இரக்கமில்லாதவன், பிராணிகளுக்கு த்ரோஹம் செய்பவன் இவர்கள் இங்கு ஸுகமடைய மாட்டார்கள். இங்கு வஸிப்பவர்களுக்கு பாவம் செய்வதில் புத்தி செல்லாது.
சிவசைலத்தைச் சுற்றி ஐந்து யோஜனை வரையுள்ள பூமி பரிசுத்தமானது. புண்யத்தைத் தரும். கைலாஸபர்வதத்திற்கு ஸமமானது. இங்கு வஸிக்கும் மனிதர்கள் தேவர்களாகின்றார்கள். சிவசைலத்தில் ஒருமாதம் வஸிப்பவன் சிவபதத்தையடைகிறான்.எப்பொழும் வஸிப்பவனைப் பற்றிக் கேட்பானேன்?. சிவதீக்ஷை பெற்று சைவாகம முறைப்படி சிவசைலேசரைப் பூஜிக்கிறவன் சிவசைலேசனே. அவன் பூஜிக்கத்தகுந்தவன். சிவசைல க்ஷேத்ரத்திற்கு ஜீர்ணோத்தாரணம் செய்கிறவன் எல்லா அபீஷ்டங்களையும் அடைவான். பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் படி செய்பவனிடம் அஷ்டைச்வர்களும் செழிப்பாக இருக்கும்.
முனிவர்களே! நான் உண்மையாகச் சொல்கிறேன். சிவசைலநாதரின் பெருமைகளை முழுவதும் சொல்வதற்கு ஆயிரன் நாவுகள் படைத்த ஆதிசேஷனாலும் முடியாது என்றால் என்னைபோன்றவர் எப்படிச் சொல்ல முடியும்?. இந்த சிவசைல மாஹாத்மியத்தை தினமும் படிக்கிறவனும், கேட்கிறவனும் புண்யத்தை எப்பொழும் செய்வதில் ஆசையுள்ளவனாக ஆகி எல்லாச் செல்வங்களையும் செழிப்புகளையும் அடைந்து எல்லாராலும் வணங்கத்தக்கவனாகிறான்.
   முதலாவது அத்யாயம் முற்றிற்று.            

நன்றி ; நிதீஷ்வரன்.