Monday, March 9, 2020

ஸ்ரீஅருட்குருமூர்த்தி துதி


ஸ்ரீஅருட்குருமூர்த்தி துதி
சீர் தருகும் பரமானந்த வடிவமாய்
சின்மயனே – ஜெகன் நாதா
சிந்தை அடங்கிட சிவபதம் அளித்தருள்
தேசிகனே – குருநாதா

என்றும் இல்லா உலகை ஏன் எனக்குக் காட்டியே
ஏங்க வைத்தாய் – ஜெகன்நாதா
நான் அன்றி வேறில்லா தானாகி நின்றிட
நலமெனக்கருள் – குருநாதா

காரணனாய் நின்று கஷ்டஸுகம் தந்து
கலங்கவிட்டாய் – ஜெகன்நாதா
பூரணனாய் உன்னில் கலந்திடச் செய்
பரிபூரணனே – குருநாதா

அந்தகன் போல் யானும் அலைந்தலைந்தும்
உன்னை அடைந்தறியேன் – ஜெகன்நாதா
பந்த பாசங்கள் அற்று பரமாய் நிறந்திடச் செய்
பராபரனே – குருநாதா

தில்லை சிதம்பராம் எல்லையில்லா வெளியில்
நில்லா நடம் புரியும் – பாதா
சொல்லாமல் சொல்லி என்னை சொரூபத்தில்
சேர்த்து வை சேதனனே – குருநாதா

மாயை என்ற பேயை மதித்திடச் செய்தென்னை
மயங்க விட்டாய் – ஜெகன்நாதா
பாயும் சுவாஸம் எல்லாம் பரத்துடன் சேரச் செய்
பரமேச்வரனே – குருநாதா

மதிமயமாய் என்னில் சதிகள் பல செய்யும்
சாச்வதனே – ஜெகன்நாதா
பசு பதி பாசம் என்ற திரைகள் அறுக்கச் செய்
பசுபதியே – குருநாதா

மான்மழுவேந்தியே மாநிலம் காத்து நின்ற
மஹேச்வரனே – விச்வநாதா
நான் என்ற அகந்தை விட்டு தானாகி நின்றிடச் செய்
தாண்டவனே – குருநாதா

அண்டபுவனமெல்லாம் ஆண்டருள் செய்யுமென்
ஆண்டவனே – ஜெகன்நாதா
கொண்டல் போன்ற மும்மலங்களை நீக்கச்செய்
சண்டமாருத – குருநாதா

ஜீவேச்வர ஜகத்தாய் இஹபரம் இரண்டுமாய்
ஏகனாய் நின்ற – ஜெகன்நாதா
ஜீவப்ரஹ்மைக்ய ரகசியம் தெளியச்செய்
ஜீவ பண்டிதனே – குருநாதா

பூதம் ஐந்தால் ஆன கோசங்கள் ஐந்தினுள்
ஜோதியாய் நின்ற – ஜெகன்நாதா
ஸாதகத்தால் பஞ்ச கோசங்கள் அறுத்துன்னை
சந்திக்கச் செய் – குருநாதா

பொறிபுலன்கள் தந்து பேரறிவைக் குறைத்து
பேயனாக்கி வைத்தாய் – நாதா
அறிதற்கு அரிதாகும் ஆறாம் அறிவைத் தந்து
ஆதரித்தருள் – குருநாதா

கண்ணுக்கு கண்ணாய் கண்ணின்றி காணும் உன்னை
காண்பது எங்கண் – ஜெகன்நாதா
காந்தம் இரும்பு போல் கவர்ந்தென்னை விடாமல்
கலந்திடுவாய் – குருநாதா

கெஞ்சியும் கொஞ்சமும் நெஞ்சமிரங்கலையோ
அஞ்சாதே என்றருள் – ஜெகன்நாதா
வஞ்சனையால் வந்த ஸஞ்சிதம் போக்கிவை
குஞ்சிதனே – குருநாதா

அகமதில் நீ இல்லையோ அகந்தை ஏன் வளர்த்திட்டாய்
அச்சுதனே – ஜெகன்நாதா
சுகக்கடல் பொங்கிட சொல்லுணர்வடங்கிட
சுயம்பு ஆக்கிவை –குருநாதா

துப்பறிவில்லாத இப்பிறப்பெனக் கீய்ந்த
ஒப்புயர்வற்ற – ஜெகன்நாதா
ராப்பகல் இல்லாத வெட்ட வெளியில் என்னை
ரமித்திடச் செய் – குருநாதா

ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனதருள் – நாதா
மேன்மேலும் ஆசையை மேவிடச் செய்யாதுன்
தன்மை எனக்கருள் – குருநாதா

வரும் பிறவிகள் மாற்றி தரும் கர்மங்களைப் போக்கி
பெரும் பதம் எனக்கருள் – நாதா
அருட்பெரும் ஜோதியாய் அமர்ந்திடச் செய்
என் குருபரனே – ஞானவரதா.
அருட்பெரும் ஜோதியாய் அமர்ந்திடச் செய்
என் குருபரனே – ஞானவரதா.

No comments:

Post a Comment