Monday, March 9, 2020

ஸ்ரீஆதிபராசக்தி


ஸ்ரீஆதிபராசக்தி
அகணிததாரா கணங்களின் நடுவே
ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
ஸகல சராசரத்தும் தங்கச் சிலம்பொலிக்க
ஜகதீச்வரியவள் ஆடுகின்றாள்- அவள்
ஜகதீச்வரியவள் ஆடுகின்றாள்

அயனென வருவாள் அனைத்தையும் படைப்பாள்
ஹரியென அளிப்பாள் அரனென அழிப்பாள்
அழிவிலிருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம்
அகிலாண்டேச்வரி ஆடுகின்றாள்- அவள்
அகிலாண்டேச்வரி ஆடுகின்றாள்

அகிலமுழுதும் உள்ள ஆருயிரினங்களும்
ஆழப்பெருங்கடலில் வாழுயிரினங்களும்
அன்றன்று உணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேச்வரி ஆடுகின்றாள்- அவள்
அன்னபூர்ணேச்வரி ஆடுகின்றாள் 

கனக கமலந்தன்னில் கனிந்த சிவப்பொருளைக்
கலந்து பேரின்பங்காட்டும் கனல் வடிவானவளாம்
நானற்ற நல்லோர்க்கெல்லாம் நான் இதோ என்று தோன்றும்
ஞானபரமேச்வரி ஆடுகின்றாள்- அவள்
ஞானபரமேச்வரி ஆடுகின்றாள்

இதயவீணை எழும் இன்னிசையவளே
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே
நாற்பத்து மூன்று கோண நாத மணிமண்டபத்தில்
ஸ்ரீலலிதேச்வரி ஆடுகின்றாள்- அவள்
ஸ்ரீஷோடஸாக்ஷரீ ஆடுகின்றாள்

அழைக்குமுன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக்குட்படுவாள் அனந்த கல்யாணியவள்
அருட்கவிமாலை பாடும் அகத்தியன் அகத்திலே
அமுத சந்திரேச்வரி ஆடுகின்றாள் – அவள்
ஆனந்த நாடகம் ஆடுகின்றாள் – அவள்
அகஸ்த்யஸித்தேச்வரி ஆடுகின்றாள்.
அகணிததாரா கணங்களின் நடுவே
ஆதிபராசக்தி ஆடுகின்றாள்– அவள்
ஆனந்த நாடகம் ஆடுகின்றாள்.

No comments:

Post a Comment