Monday, March 9, 2020

ஸ்ரீஞானபுரீச்வரர் தேவாரம்


ஸ்ரீஞானபுரீச்வரர் தேவாரம்

மோதகபாசாங்குச கனகும்பமும்
மெய்யொளி ஓர் கொம்பும்
மாதவர் மனமலர் மாறிலாதுரை தரும்
மலரடியிரண்டோடே

நாத ஓங்காரத் திருவுருக் கொண்டு
ஞானானந்த தபோவனம் வாழ்
நாத கஜானான ஞானகணேச நின் 
நன்மலர் அடி போற்றி

தேனார் கொன்றையும் தீம்புனல் மத்தமும்
                               திங்களொடு சூடி
கானாமுதத்தொடு கருத்தே உருகுவார்
அன்புளத்தே யகலான்
ஞானானந்தபுரி ஞானானந்தகிரி
நல்லருள் கூட்டிடலால்
வானாடளித்துடன் தானாய் நிறுத்துவன்
வண்மலர்த் தாள் நிழலே.

அலகொடு மெழுகிட்டு அன்பினால் நறும்புகை
ஆனெய் விளக்கேற்றி
மலர்த்தொடுத் தளித்திடுவார் மனத்தகலாத
வள்ளல் வார்சடையான்
அலகிலா அருள் ஞானானந்த தபோவன
ஞானபுரீச்சுரனார்
மலமறுத்திணையடி மற்றீண்டு வாரா
வகைமுத்தி வழங்குவனே.

மாவடிக் காஞ்சியோ மாகமாந் தில்லையோ
மற்றருணாசலமோ
தேவன் ஆனைக்காவோ திகழ்தரு காளத்தி
திரியாது நெஞ்சே நீ வா
மூவடி கேட்டன்று முழுதுலகளந்தானும்
முந்து வீரட்டனமர்
கோவலூர் மாநகர் குறுகு ஞானானந்த
ஞானபுரீச்சுரமே

பெண்ணமர் பாகத்தன் பெண்ணை நதிக்கரை
பேசு ஞானானந்தரோடு
உண்ணிறை அன்பர்கட்கருள் செய நிற்கையில்
உறுதுயர் ஏன் உனக்கே

பண்ணிறை பாடலும் பக்தியும் உள்ளத்துப்
பற்றரும் பாங்குடனே
கண்ணிறை கர்த்தனைக் காண நீ நன்னெஞ்சே
கடுகு தபோவனமே

ஞானகணேசனும் ஞான தண்டாயுதன்
ஞானாம்பிகையோடு
தேனமர் மாவின்கீழ் கிரி ஞானானந்தரின்
திருவடி நீங்காதா
தான நற்சிந்தையால் சார்ந்திடு நெஞ்சமே
தன்னிகரில்லாமை
ஆன நற்பதமுனக்களித்தருள்வானுயர்
ஞான புரீச்சுரனே

அந்தகாசுரன்றன்னை யடர்த்த வீரட்டனும்
அமுதருள் கோவலனும்
முந்துற எழுந்தருள் முதுநகர் கோவல்சார்
மூதறிவாளர் நிறை
எந்தை ஞானானந்த எழிற்குரு அருளென்ன
இன்னிழற் சோலைவளர்
வந்தவர் வினைபோக்கும் ஞான புரீச்சுரன்
மலரடி சார்நெஞ்சமே

உடற்பிணி மட்டுமோ உளப்பிணியுந்தீர்த்து
ஓதரு வீடெய்தவே
மடத்தகை நீக்கிநன் மலரடி காட்டுமோர்
வள்ளல் ஞானானந்தர் சே
இடத்தமர் ஞானபுரீச்சுரன் மலரடி
இன் தமிழாற்பாடி
கிடத்தி நன் நெஞ்சமே கேளினிப் பிறவாமை
கிட்டுமோர் அட்டியின்றே

காமக் குரோதமே லோபமே மோகமே
காண் மதமாற்சர்யமே
தாமணுகா வகை தண்ணருளால் நமைத்
தகுதியால் ஆட்கொள்ளுவான்
பாமரராயினும் பண்பினராயினும்
பகர் அறிவுரை சாற்றும்
நாம ஞானானந்த கிரியுடன் அமர்தரு
ஞானபுரீச்சுரனே

தன்கடைக்கண்ணினால் தாயென அறிவுரை
சாற்று தந்தையும் போலே
மண்ணிடை மானினால் மான் பிடிப்பார் போல
வந்தருள் ஸத்குருவாய்
விண்ணவர் சிவரத்னகிரி திருவடி நீங்கா
மேன்மை ஞானானந்தர் பால்
கண்மணியொப்பவர் கருதுவார் பிணி நீக்கும்
ஞானபுரீச்சுரனே


நற்றமிழ்ப் பாப்பாடி ஞானபுரீச்சுரன்
நல்லடியுளங்கொண்டே
உற்றிடு ஞானானந்தர் தம் திருவருள்
உறுமன்பரொடுங்கூடி
பற்றிய இருவினைப் பாசமும் போயறும்
பாங்கினால் நமன்வாதை
அற்றவர் சூழிடம் ஆகுங்தபோவன
அண்ணல் தம் அடிபற்றே. 
அற்றவர் சூழிடம் ஆகுங்தென்னாங்கூர்

அண்ணல் தம் அடிபற்றே.  

No comments:

Post a Comment