Monday, March 9, 2020

ஸ்ரீஸத்குரு ஞானானந்த நவரத்ன மாலை


ஸ்ரீஸத்குரு ஞானானந்த நவரத்ன மாலை
பெண்ணை நதியின் வடகரையில்
கண்ணைக்கவரும் சோலைதனில்
தன்னைஅடைந்தோர் உயர்ந்திடவே
தனித்தே அமர்ந்தார் ஞானனிவர்

அன்பே உருவாய்க் கொண்டவராம்
ஆலின்கீழே அமர்ந்தவராம்
அபயம் என்றே வந்தோர்க்கு
அல்லல் தீர்க்கவே வந்தவராம்

அங்கும் இங்கும் ஒரு நிலையாய்
எங்கும் நிறந்தே இருப்பவராம்
ஓடி ஓடியே அலைந்திடுவார்
உள்ளம் அசைவற்றிருந்திடுவார்

அல்லல் பட்டு அழுவோர்க்கு
அன்னையும் தந்தையும் இவராவார்
எடுப்போர்க்கெல்லாம் குழந்தை இவர்
ஏற்றித் தொழுதால் தெய்வமிவர்


அண்ணாமலையின் அருளொளியாம்
விண்ணும் மண்ணும் அளந்தவராம்
எண்ணும் ஏகாக்ஷர போதகராம்
எங்களைக் காத்திட வந்தவராம்

நாமகள் வீணையின் நாதமிவர்
நான்மறை ஓதிடும் வேதமிவர்
நான் எனும் அகந்தை அற்றோர்க்கு
நாயகனாம் விச்வநாதன் இவர்

கோதை போற்றிய சீலரிவர்
கீதாசார்ய மூர்த்தி இவர்
போதியினடியில் புத்தரிவர்
ஆதிசங்கர குருநாதரிவர்

உலகமாயை நீங்கிடவே
உள்ளம் தானாய்த் தெளிந்திடவே
எல்லாம் இவராய்க் கண்டிடவே
எளிதாய் நமக்கே உரைப்பவராம்

எல்லாக் கலைகளின் எல்லை இவர்
நில்லா நடமிடும் நாதனிவர்
சொல்லே அறியாச் சிறுவனிவன்
சொல்வதைக்கேட்டும் மகிழ்வாராம்
                     பயன்
சித்தம் ஒன்றில் நிறுத்திவிட்டு
சிந்தனை அடக்கி ஒருமனதாய்
சீருடன் இதனைப் பாடிடுவார்
சிவரத்தினமாய் வாழ்ந்திடுவார்.

ஓம் குருநாதா ஞானானந்தா
ஸ்ரீகுருநாதா ஞானானந்தா
ஸத்குருநாதா ஞானானந்தா
சரணம் சரணம் குருதேவா
சரணம் சரணம் குருதேவா.

No comments:

Post a Comment